பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருக்குறள் கட்டுரைகள்
சான்றாண்மை

இன்னா செய்தார்க்கும் இனியேவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு?

திருக்குறள் ஒரு வாழ்வு நூல். அது தமிழகத்தின் செல்வம். அதன் திரண்ட கருத்தெல்லாம் ஒன்றே ஒன்று. அது மக்களாய்ப் பிறந்தவர்கள் அனைவரும் மக்கட் பண்போடு வாழவேண்டும் என்பது. அத்தகைய பண்பு.களில் ஒன்றே சான்றாண்மை. அதனையுடையவரே சான்றோர்.

தமிழகம் சான்றோரைத் தனது நாட்டுச் செல்வமாக கொண்டிருக்கிறது. சேரநாடு வேழமுடைத்து, பாண்டி நாடு முத்துடைத்து, சோழநாடு சோறுடைத்து, தொண்டை நாடு சான்றோருடைத்து என்பது ஒளவையின் வாக்கு. இதிலிருந்து நிலவளமாகிய நெல்லும், மலை வளமாகிய யானையும், கடல் வளமாகிய முத்தும், மக்கள் வளமாகிய சான்றோரும், தமிழகத்தின் செல்வங்கள் என்ற உண்மையை நன்கு உணரலாம்.

சான்றாண்மை என்ற சொல் தமிழ்மொழி ஒன்றுக்கே உரியது.சான்றாண்மைத் தன்மை, தமிழ் மக்களின் கலை. சான்றாண்மைப் பண்பு, தமிழகத்தின் தனிப்பட்ட சொத்து. சான்றாண்மை என்ற சொல்லைக்கூடப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க முடியாது. மொழி பெயர்த்துக் கூறினாலும் அச்சொல்லில் தமிழ் கூறும் பொருள் இராது.