பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எது அறிவு?

27


மனம் செல்லும் வழிகளைத் “தவறு” என எடுத்துக் காட்டித்திருத்தி நல்வழிசெல்ல அறிவு அறிவுறுத்தினாலும் அதனையும் மீறிச் செயலாற்றும் வலிமை மனதிற்கு உண்டு என்பதை வள்ளுவர், “நன்றின்பா லுய்ப்பது அறிவு” என்ற சொற்களால் கூறாமற் கூறுகிறார்.

திருடனுடைய மனம் திருட எண்ணுகிறது. திருடத் துணிகிறான்; பிறகு திருடுகிறான். திருடும்போது அஞ்சி நடுங்குகிறான், ஏன்? அது தவறு என்று அவனுடைய மனதுக்கு அறிவுறுத்துகிறது. அறிவு உணர்த்தியும், தான் உணர்ந்தும், அறிவின்வழிச் சொல்லாமல், ஆசையால் தூண்டப்பட்ட மனதின் வழிச்சென்று திருடிவிடுகிறான். அறிவையும் மீறி மனம் செயலாற்றும் முறையை விளக்க இஃது ஒன்றே போதுமானதாகும்.

திருடுவது, பொய்சொல்லுவது, இலஞ்சம் வாங்குவது ஏமாற்றுவது, நெறி தவறுவது ஆகியவை எவ்வளவு திறமையாகச் செய்யப்பட்டாலும்; அது அறிவின் செயல் அன்று, ஆசையின் வயப்பட்ட மனதின் செயல் என்றும்: அதன் தவறுகளை உணர்த்தி நல்ல வழியில் செல்லத் தூண்டும் செயலே அறிவின் செயல் என்றும், திருவள்ளுவரின் திருக்குறள் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.

கண்டவிடமெல்லாம் கருத்தைச் செலுத்தி ஓடி அலையும் மக்களுக்கு உண்மையை உணர்த்தி, நல்வழி நடத்தும் பெற்றோர்கள் அறிவின் உரு ஆவார்கள். துள்ளித் திரியும் இளங்காளைகளை அடக்கி உழவுக்குப் பயன்படுத்தி வரும் உழவன் அறிவுருவாளன் திமிர் பிடித்த குதிரைகளை அடக்கி வண்டியிற் பூட்டி ஒழுங்காகச் செல்லும்படி நடத்துகின்ற வண்டிக்காரனும் அறிவின் உரு மதங்கொண்ட யானையை அடக்கித் தீமை செய்வதினின்றும் விலக்கி நேரான வழியில் நடத்துகின்ற பாகனும் அறிவுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவன் என்று இக் குறளால் அறிய முடிகிறது.