பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கூத்தாட்டு அவைக்குழாம்

31


இக்குறளில் உள்ள ‘போக்கும்’ என்ற சொல்லில் ‘உம்’ ஒன்றிருந்து போவதும் அப்படியே! என்று கூறுவதால், வருவதும் அப்படியே இருப்பதும் அப்படியே! என்று கூறாமற் கூறுவதைக் கண்டு மகிழுங்கள்.

நாடகம் காண வரும்போது மகிழ்வு, காணும்போது இன்பம், கலையும்போது சோர்வு உண்டாவது போல ஒருவனுக்குச் செல்வம் வரும்போது மகிழ்வும், துய்க்கும் போது இன்பமும், தொலையும்போது துன்பமும் ஏற்படும் என்ற இக்கருத்தும் இக்குறளிற் இல்லாமலில்லை.

ஒரே கூத்தாட்டு அவையை, மக்கள் நிறைந்து காணப்படும்போது நிறைந்த செல்வத்திற்கும், குறைந்து காணப்படும்போது குறைந்த செல்வத்திற்கும், கலைந்து போய் விட்டது பிறகு வறுமையின் இருப்பிடத்திற்கும் உவமை காட்டுவது, எண்ணி எண்ணி வியக்கக் கூடியதாகும்.

கூத்தாட்டு அவைக்குழாம் என்பது ஒன்றல்ல, இரண்டு, ஒன்று கூத்தாட்டரங்கில் ஆடுகின்ற குழாம். மற்றொன்று கூத்தாட்டு அவையில் கூடுகின்ற குழாம். ஆகவே, நடிகர்களின் நடை, உடை, நடிப்பு, வேடம், கதை, காட்சி, அனைத்தும் பொய்; நிலையற்றவை. நாடகம் முடிந்ததும் அவை அனைத்தும் அழிந்து ஒழிந்து ஒன்றுமேயில்லாமல் போய்விடும். அதுபோலவே உனது செல்வத்தின் தோற்றமும் இருப்பும் அழிவும் என்பதை வற்புறுத்தவே, இக் குறள் தோன்றியிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

செல்வம் வருகின்ற வேகத்தைவிட, அஃது அழிகின்ற வேகம் அதிகமாக இருக்கும் என்பது கலைஞர்களைப் பொறுத்தவரையில் 100-க்கு 95 பங்கு உண்மையாக இருக்கும் என்பதை எண்ணியே வள்ளுவர் கூத்தாட்டு அவைக்குழுவை உவமையாகக் கொண்டாரோ? என்றும் எண்ண வேண்டியிருக்கிறது.