பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரந்து வாழும் வாழ்வு

35


ஆசிரியர் திருவள்ளுவர், பிச்சைகேட்கும் மக்களிடம் சென்று அவரே பிச்சை கேட்பதாக அமைந்திருக்கிறது அடியிற் கண்ட குறள்:

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பிற்
கரப்பா ரிரவன்மின் என்று

‘வைத்துக்கொண்டே மறைப்பவர்களிடத்துச் சென்று பிச்சை கேட்க வேண்டாமென்று, பிச்சை எடுத்து வாழ்பவரிடத்து நானொரு பிச்சை கேட்கிறேன்’ என்பது பொருள் இரந்து வாழும் வாழ்வுக்கும் ஒரு சிறப்பு இருக்குமானால், இது அதையும் கெடுத்துவிடும் என்பது குறிப்பு.

‘அவரவர் கடமையைச் செய்ய எல்லா இழிதொழிலாளாராலும் இயலும். இரந்துண்போருக்கு மட்டும் இயலாது’ என்றெண்ணிய கொன்றைவேந்தன் ஆசிரியர்

ஐயம் புகினும் செய்வன செய்

எனக் கூறினார், ‘கல்வியைக் கற்க எல்லோராலும் இயலும் இரந்து வாழ்பவர்க்கு இயலாது’ என்று எண்ணிய அதிவீர ராமபாண்டிய மன்னன்,

பிச்சை புகினும் கற்கை கன்றே

எனக் கூறினார்.

இரந்துண்ணுவது மட்டும் இழிவன்று ஒருவன் மகிழ்வோடு கொடுப்பதைப் பெறுவதும் இழிவு எனறு எண்ணிய ஒளவையார்,

ஏற்ப திகழ்ச்சி எனக் கூறியுள்ளார்.

இதுகாறுங் கூறியவற்றால், இரத்தலும் அதன் துன்பமும், இரந்து வாழும் வாழ்வும் அதன் இழிவும், இது போன்ற பிறவும் இனிது புலனாகும்.