முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களுக்கு 60-ஆம் ஆண்டு இன்று பிறக்கிறது. இந்த அறுபது ஆண்டுகளில் தமிழர்க்கும் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் அவர்கள் செய்துள்ள பணிகள் மிகப்பல இந்தி எதிர்ப்புப் போரில் அவர்களின் பேராற்றலையும் பேச்சுவன்மையையும் கண்டு தமிழகம் முழுவதும் வியந்தது; போற்றியது.
தமிழரின் பாதுகாவலர் திரு. விசுவநாதம் அவர்கள். இதை நன்கு உணர்ந்து, ‘முத்தமிழ்க் காவலர்’ என அவருக்குப் பட்டம் வழங்கிப் பாராட்டிய திருச்சி தமிழ்ச் சங்கத்தார் தமிழ் மக்கள் அனைவரின் பாராட்டுதலுக்கும் உரியவர்கள். தமிழுக்குத் தீங்கு என்றால், தமிழ் மக்களுக்குத் துன்பம் என்றால், தமிழ்நாட்டின் பெருமைக்கு இழுக்கென்றால், கி.ஆ.பெ.வி.யின் உள்ளம் துள்ளி எழும். தீமை செய்வோர் எத்தனை உயர்ந்த பெரியவர்களாயினும், எத்தனை பெரிய தலைவர்களாயினும், அஞ்சாது, அவர்களின் தவறை எடுத்துக் காட்டுவார். இந்தப் பணியை எழுத்து, பேச்சு, நாடகம் என்ற பல துறைகளிலும் அவர்கள் செய்து வருகிறார்கள்.
அவர் இயற்றிய பல நாடகங்கள், நூற்றுக்கணக்கான மேடைகளில் நடிக்கப்பட்டுள்ளன. இந்திய வானொலி நிலையத்தின் வாயிலாகக் கன்னடம் முதலிய பிறமொழிகளிலும் ஒலிபரப்பப்பட்டுள்ளன. டெல்லியிலிருந்து வெளிநாட்டு மக்களுக்கும் ஒலிபரப்பப்பட்டு, தமிழரின் பெருமையை உலகெங்கும் உணரச் செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய பேச்சுக்கள் தமிழகத்திலும், மலேயா, இலங்கை போன்ற கடல் கடந்த நாடுகளிலும், பல ஆயிரக் கணக்கான மேடைகளில் ஒலித்துள்ளன. அவர்கள் எழுதிய நூல்கள் இலட்சக் கணக்கான தமிழர் இல்லங்களில் மகிழ்வூட்டிக் கொண்டிருக்கின்றன.
இதுவரை அவர்கள், தமிழ்ச் செல்வம், எண்ண குவியல், தமிழ் மருந்துகள், வள்ளுவரும் குறளும், தி-