பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

திருக்குறள் கட்டுரைகள்


துறைகளிலும் அது அடங்கியிருப்பதைக் கண்டு மகிழுங்கள்.

‘அளவுக்கு மீறினால் அச்சு முறிந்துவிடும்’ என்பதில் வண்டியும் சுமையும்தானா அடங்கியிருக்கின்றன. வாயும் உணவும்கூட அடங்கியிருக்கின்றன. சுவை மிகுதியினால் உணவை அதிகமாக உண்டுவிட்டால், அச்சு முறிவதைப் போல இவ்வுலக வாழ்வும் முறிந்துவிடும்’ என்ற கருத்தும் இதில் அடங்கியிருக்கிறது.

நட்புக்கும் அளவுண்டு. அளவுக்கு மீறி விடுமானால், அது நட்புக் கொண்ட உள்ளத்தையே முறித்துவிடும் என்ற கருத்தும் இதில் அடங்கியிருக்கிறது.

தன் நிலைமையை அறிந்து, வருவாயை உணர்ந்து, பொருளை எண்ணிச் செலவு செய்ய வேண்டும்.அளவுக்கு மீறிவிடுமானால், அச்சு முறிவதைப்போல அச்செல்வமும் முறிந்துவிடும் என்பதையும் அவர் கூறாமற் கூறியிருக்கிறார்.

அவைகளில் நிகழ்த்துகின்ற சொற்பொழிவும் ஒரு அளவோடு இருக்க வேண்டும். அது அளவுக்கு மீறி நீண்டுவிடுமானால், அச்சு முறிவதைப்போல அவையோர் உள்ளத்தை முறித்துவிடும் என்பதும் அக்குறளில் பொதிந்தே கிடக்கிறது.

மனைவியை, மக்களை, தம்பியை, தங்கையை அடக்கி வளர்க்க வேண்டியது தன் கடமை எனக் குடும்பத்தின் தலைவன் கருதுகிறான்.உண்மைதான்! என்றாலும், அது அளவுக்கு மீறிவிடுமானால், அச்சு முறிவதைப்போல, அது குடும்பத்தையே முறித்துவிடும் என்ற கருத்தும் இக் குறளில் இல்லாமலில்லை.

மாடிமீது கட்டப்படும் கட்டடங்களுக்கும் ஒரு அளவு இருக்க வேண்டும். அளவுக்கு மீறிவிடுமானால், அச்சு முறிவதைப்போல அவ்வீடும் முறிந்துவிடும் என்பதையும் அக்குறளில் அடக்கித்தான் வைத்திருக்கிறார்.