உடையர் எனப்படுவது...!
55
இக்குறளில் உள்ள “திரிந்த” என்ற ஒரு சொல், “பாலும் திரிந்து கெடும்; வாழ்வும் திரிந்து கெடும்” என்ற பொருளைக்குறித்து நிற்பதைக் கண்டுகளியுங்கள். இதிலிருந்து நலவாழ்வுக்கு வேண்டியது பொருள் அல்ல. பண்பு என்று நன்கு விளங்குகிறது.
இப்பத்து உடைமைகளிலும் சிறந்து உயர்ந்து நிற்பது ஊக்கமுடைமையேயாகும். இதனை,
உடையர் எனப்படுவது ஊக்கம்; அஃதிலார்
உடையது உடையரோ மற்று
என்பதனால் நன்கறியலாம்.
இது ஊக்கமுடைமையிற் கூறப்பெற்றுள்ள முதற் குறள் உடைமை என்பது ஊக்கமுடைமை என்பதும், உடையவர் எனப்படுபவர் ஊக்கமுடையவர் என்பதுவும் அஃதில்லாது வேறு எதை உடையவரும் உடையவராகார் என்பதும் இக்குறளின் கருத்து. நிறைந்த செல்வத்தைப் பெற்றிருந்தாலும் ஊக்கம் இல்லாதவருக்கு அதனைக் காக்கும் ஆற்றல் இராது. ஆதலின், அதனை அவர் இழந்துவிடுவர் என்பது குறிப்பு, இதனை,
உள்ளம் உடைமை உடைமை; பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
என்ற குறளால் நன்கு விளக்கிக் காட்டுகிறார்.
ஊக்கமுடைய மக்கள் தம்மிடத்து உள்ள பொருளை இழப்பினும் வருந்துவதில்லை. ஏனெனில், அவர் அதனை விரைவில் முயன்று பெற்றுவிடுவர்.
ஊக்கமுடையவன் செல்வத்தைத் தேடித்திரிய வேண்டியதில்லை. ஏனெனில், செல்வமானது ஊக்கமுடைய மக்களின் இருப்பிடத்தைத் தானே தேடிப் போய்ச் சேரும் தன்மை வாய்ந்தது.