பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

திருக்குறள் கட்டுரைகள்

எறியப் பெற்ற வேல் ஒன்று அவன் மார்பின் மீது பாய்ந்தது. வீரன் அதனைப் பிடுங்கிக் கொண்டு நகைத்தான் என்பதே இக் குறள் கூறும் வரலாறு.

“கைவேல் களிற்றொடு போக்கி” என்பது வேலின் தாக்குதலால் புண்பட்டு வீறிட்டுப் பின்வாங்கி ஓடும் யானையினது உடலோடு வேலும் போய்விட்டது என்பதா? அன்றி களிற்றினது உடலில் புகுந்து அதன் உயிரைப் போக்கித் தானும் அதன் உடலில் அழுந்தி மறைந்துபோயிற்று என்பதா? புலப்படவில்லை. எனினும் இவை இரண்டுமே வீரனுக்கு வெற்றி தருவனவாகும்.

வெற்றிபெற்ற இவன் தன் கை வெறுமையாயிருப்பதைக் கண்டு மறுபடியும் ஒரு கருவியைப் பெறப் போர்க் களத்திலிருந்து திரும்புகிறான். வீரன் திரும்பி வரும் செய்தியைக் குறளில் உள்ள “வருபவன்” என்ற சொல்லால் அறிய முடிகிறது. அப்போது மாற்றான் குறி வைத்து எறிந்த வேல் ஒன்று இவன் மார்பின் மீது வந்து பாய்கிறது. அதைத் தன் கைகளிற் பற்றிப் பறித்துக் கொண்டே நகைக்கிறான்.

நகும் என்பது நகுதல் என்றாகிறது. இது நகைத்தல், சிரித்தல், களித்தல், மகிழ்தல் என்பவைகளைக் குறிக்கும். வீரன் ஏன் நகைத்தான்? எதன்பொருட்டு நகைக்கிறான்? என்று எண்ணும் பொழுதே, நமக்கு ஒரு வியப்பு உண்டா கிறது.

தேடிச்சென்ற கருவி வழியிலேயே தானே வலிய வந்து அகப்பட்டுவிட்டதே என எண்ணி நகைக்கிறானோ? அவ்விதமாயின் இது மகிழ்ச்சிச் சிரிப்பாகும்.

மார்பில் தைத்த வேல் ஊடுருவிச் சென்று தன்னை வீழ்த்திவிடாமல் கையாற் பறித்து எடுக்கும் அளவில் மட்டும் தைத்ததேயென்று நகைக்கிறானோ? அவ்விதமாயின் இது வெற்றிச் சிரிப்பு ஆகும்.