மாட்டார்கள். ஏன் இதனைச் செய்தோம் என்று இரங்கத்தக்க வகையில் ஒரு காரியத்தைச் செய்யாதே; தவறிச் செய்து விட்டால் அதனை மேலும் தொடராதே.
பெற்ற தாய் பசித்தாலும் அதற்காக நீ தாழ்ந்து போகாதே; அவளை வாழ்விக்கவும் தவறு செய்யாதே; பழியோடு கூடிய செயல் செல்வத்தைக் குவிக்க உதவினாலும் அது மதிக்கத்தக்கது அன்று. சான்றோர் வறுமை அவர்களுக்குப் பெருமை தரும். பிறர் அழும்படி வருத்தி ஈட்டிய செல்வம் நிலைக்காது; நல்ல வழியில் ஈட்டியவற்றை இழந்தாலும் மறுபடியும் சம்பாதித்துக் கொள்ள முடியும்.
வஞ்சித்துப் பொருளைச் சேர்த்து வைப்பது பச்சை மண்குடத்தில் நீர் சேமித்து வைப்பதுபோல் ஆகும்; அது நிற்காது; நாலாவழியும் கசிந்து போகும்; பொருள் நசிந்து போகும்.
ஒரு செயலை ஏற்றால் அதனைச் செய்து முடிப்பது என்ற மனஉறுதி இருக்க வேண்டும்.
இடையூறு வருமுன்பே அறிந்து நீக்குக: வந்தபின் அதனைக் கண்டு தளராதே.
எதனையும் முன்கூட்டிச் சொல்லிவிடாதே; செய்து முடித்தபின் மற்றவர்கள் தாமே அறியட்டும்; இடையில் அதனை வெளிப்படுத்தினால் தடைகள் ஏற்படும்; அதனைக் கெடுத்துவிடுவர்.