பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திருக்குறள் செய்திகள்
1. அறத்துப் பால்
1. கடவுள் வாழ்த்து

ஏட்டுச் சுவடி எடுத்துக் காட்டும் முதல் எழுத்து அகரமாகும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் உலகைப் படைத்தவன் இறைவன் ஆவான்; அவனே உலகத்தின் தொடக்கமும் ஆவான்.

படித்துப் படித்து நீ பண்டிதன் ஆகலாம்; அதை மடித்து வைத்துவிட்டு நீ சுயமாகச் சிந்தித்துப்பார்; இறைவன் தாளை நீ வணங்காதவிடத்து, நீ படித்த தாள்கள் அத்துணையும் வெறும் கோடுகள்; உன் படிப்பும் பயனற்றது ஆகிவிடும்.

அடியவர் உள்ளத் தாமரையில் உவந்து குடியிருப்பவன் இறைவன்; அவன் வெள்ளைத் தாள்களை மனத்தில் நிறுத்து; நீ நிலமிசை நீடு வாழ்வாய்.

விருப்பு வெறுப்பு என்பது அவனிடம் இருப்புக் கொள்வது இல்லை. அவன் தாளை வணங்கு; உன் இடும்பைகள் தீரும்.

இறைவனின் புகழ் பொருள் மிக்கது. அவன் புகழைப் பாடு; இருளில் சேர்க்கும் தீய வினைகள் உன்னை வந்து அடையா.