பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
161


நாணம் உள்ளத்தில் இல்லாமல் இருப்பவர் நடமாட்டம், மரப்பாவை கயிறுகொண்டு ஆடுவது போன்றது ஆகும். இயக்கம் இருக்கும்; உயிர் இருக்காது.

103. குடிசெயல் வகை

குடிப்பெருமை என்பது அதில் பிறந்த மகன் செய்யும் நற்செயல்களைப் பொறுத்தது ஆகும். தனக்கு உள்ள புகழ், செல்வம், கல்வி இவை போதும் என்று ஒதுங்கிவிடக் கூடாது.

குடும்பம் என்பது ஆலமரம் போன்றது, அதனில் ஒதுங்கி வாழ்பவர் பலர்; சிலருக்குத் திறமை இருக்கலாம். சிலருக்கு வாய்ப்பு இல்லாமல் போகலாம். வாய்ப்புகள் ஒருசிலருக்கே அமைகின்றன. அவர்கள் தன்னலம் கருதாது குடும்ப நலம் கருதி உழைப்பது கடமையாகும்.

“எனக்கு என்ன வந்தது? எது எக்கேடு கெட்டாலும் கெட்டுப் போகட்டும்” என்பவன் கடமையில் இருந்து நெகிழ்பவன் ஆகிறான். கருமம் செய்வது தன் கடமை என்று எவன் கொள்கிறானோ அவனே விரும்பத் தக்கவன்; பெருமைக்கு உரியவன் ஆகிறான்.

விடாமுயற்சியும், கடின உழைப்பும், நிறைந்த அறிவும் குடியை உயர்வு பெறச் செய்யத் தேவையாகும்.

குடியை உயர்த்துவேன் என்று முற்பட்டுச் செயலில் இறங்கினால் தெய்வமும் அவனுக்கு உறுதுணையாக நின்று உதவி செய்யும். அஃது அவனை வந்து தாங்கிக் கொள்ளும். அவனுக்குத் தான் மேற்கொண்ட காரியம் சிரமம் இன்றி எளிதில் கைகூடிவிடும்.

11