இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தலைவன் கூற்று
“சோலையில் சொக்கிப் போகத் தக்க அழகியைத் தலைவன் தனிமையில் காண்கிறான்; அவன் தான் கண்ட காட்சியையும், அதனால் ஏற்பட்ட மருட்சியையும் விவரிக்கின்றான்”.
“இந்த அழகி யார்? என்னை வருத்துகிறாள். மாநிலப் பெண்ணா? தேவ மகளா? மயிலியல் இவளிடம் வந்து பயில்வு பெறுகிறது. இவள் சாயல் என்னை மயக்குகிறது.”
“என் விழிகள் அவள் விழிகளைச் சந்திக்கின்றன; அவள் எதிர்நோக்கினாள்; நான் அதிர்ந்துவிட்டேன். படை கொண்டு தாக்கியதைப் போல இருந்தது.”
“கூற்றுவன் கொடியவன் என்பதனை முன்பு அறிந்தது இல்லை. இன்று அவன் பெண்வடிவில் வந்து என்னைப் பேதைமைப்படுத்திவிட்டான். என் விழிகள் அவள் அழகைப் பருகின. அவள் பார்வை என் உயிரையே பருகுகிறது.”
“தாக்குவதால் கூற்றுவனையும், மயக்குவதால் பெண் மானையும் நிகர்க்கும் அவள் கண்கள் எனக்கு அருளுவதால் பெண்மையையும் பெற்றிருக்கிறது."