பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
175


“தாமரைக்கண்ணாள் அவள் தோளில் துயில இடம் தந்தாள்; தாமரைக் கண்ணான் உலகு சுவர்க்க பூமி என்பார்கள்; இவள் தோள் தரும் இன்பத்திற்கு அஃது இணையாகாது.”

“அவள் அருகில் இருந்தால் குளிர்கிறாள்; விலகி நின்றால் சுடுகிறாள்; இந்தத் தீ புதுமையானது. இந்தத் தீயை இவள் எப்படித்தான் பெற்றாளோ?”

“வேட்கை உறும்போது எல்லாம் அவள் தோள்கள் தழுவ இடம் அளிக்கின்றன.”

“அமிழ்தில் இயன்றவையோ என்று கூறும் படி என் உயிர் தளிர்க்கச் செய்கிறாள்; தோளைத் தொடும்போது எல்லாம் அவள் இனிமை தருகிறாள்.”

“அவள் முயக்கு என்னை மயக்கும். ஒருவன் தன் வீட்டில் இருந்துகொண்டு தன் உழைப்பில் சாப்பிட்டுப் பிறர்க்கும் பகிர்ந்து உண்டு வாழும் மனநிறைவை இவள் மயக்கில் அடைகிறேன். அவர் தம் வீட்டில் இருந்து அவரவர் உழைப்பில் உண்பது அந்தச் சுகத்துக்கு எதுவும் நிகராகாது என்று நினைத்து வந்தேன்; அதே சுகத்தை அவள் தழுவலில் காண்கிறேன்.”

“விரும்பும் இருவர் முயக்கில் காற்று இடை புகுதல் அதற்குத் தடையாகிறது. காற்றுப் புகும் இடை வெளியும் அவள் அணைப்பில் அமையாதபடி இணைந்து இன்பு எய்தினேன்.”

“காதல் அணைப்பில் என்ன சுகம் காண்கிறாய்? இந்த வினாவுக்கு விடை இதுதான்; ஊடல்; அது மாறினால் கூடல்; இவை அல்லது வேறு சுகம் காதலின்பத்தில் காண்பது இல்லை."