பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
181


“கள் குடிக்கக் குடிக்கப் போதை தரும்; காதல் பற்றிப் பேசப் பேச அது பரவுதலைப் பெறும். அலர் எழுந்தால் தான் காதல் மலர்ச்சியை மற்றவர்கள் அறிவார்கள். குடித்தவன் என்று பேசினால்தான் குடிக்கே பெருமை சேர்கிறது: காதல் படிந்தவர் என்றால்தான் எங்களுக்கும் பெருமை சேர்கிறது.”

தலைவி கூற்று

“யாருக்கும் தெரியக்கூடாது என்றுதான் இருட்டியதும் எங்கள் சந்திப்பை வைத்துக்கொள்வோம்; ஒரே ஒரு முறை இந்த ஊரார் கண்ணில் அகப்பட்டுக் கொண்டோம்; பிடித்தது சனியன்; எங்களை விட்டுவிட மறுக்கிறார்கள்; சந்திரனைப் பாம்பு கவ்விய செய்தியாக எங்கும் பேசத் தொடங்கிவிட்டார்கள்; வம்பு பேசுவதற்கு நாங்கள் அகப்பட்டுக் கொண்டோம்.”

“எங்கள் காதலைக் கிளறிக்கொண்டே இருக்கிறார்கள்; அது காதற் பயிருக்கு இடும் எரு. அதனோடு சேர்த்து அன்னையின் கடுஞ்சொற்கள் பயிருக்குப் பாய்ச்சும் தண்ணீர் ஆகிவிட்டது.”

“நெருப்பை நெய்கொண்டு அணைக்க முடியாது. எங்கள் காதலை இவர்கள் அலர் தூற்றுதல் மாற்றாது.”

“அஞ்சாதே என்று உறுதிதந்தவர் இன்று அவர் எஞ்சாதே வருவது தவிர்த்தார். மிஞ்சாது அலர் தூற்றுதற்கு நான் நாண முடியாது; பணியமுடியாது.”

“அலர் எங்களை இங்கே வாழவிடாமல் ஊரைவிட்டுத் துரத்துகிறது; உடன்போக்கு அதுதான் அடுத்த கட்டம். என் காதலர் அதற்கு உடன்படுவார். அதன்பின் அச்சிட்டு அழைப்பிதழ் தரவேண்டியதுதான்."