பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19


11. செய் நன்றி அறிதல்

நல்லது செய்கிறார்கள்; உடனே அதனை மறந்துவிடுகிறோம்; மறதியா இதற்குக் காரணம்? அசதிதான் காரணம்.

உலகில் ஏன் ஒருவர் மற்றவருக்கு ஏதாவது உதவி செய்கிறார்கள்? அதுதான் மனிதப் பண்பாடு; மழை ஏன் பெய்கிறது? அது மேகத்தின் கொடைத் தன்மை.

நீ எந்த உதவியும் செய்தது இல்லை; முன்பின் பழகியதும் இல்லை; யாரோ எவரோ உன் தேவையை அறிந்து உதவிசெய்கிறார். உதவிசெய்வது அவர் உத்தி யோகம் அன்று; கடமையும் அன்று; மனப்பண்பாடு: அவ்வளவுதான்; அதற்கு நிகராக எதனைத் தந்தாலும் ஈடு ஆகாது; வானமும் ஈடாகாது; இந்த வையகமும் நிகராகாது.

காலத்தில் வந்து உதவுகிறவர் செய்யும் உதவி சிறிது எனினும் அது தக்க சமயத்தில் செய்யப்பட்ட செயல் ஆகும்; அதன் விளைவு மிகப் பெரிது ஆகும்.

உயிர்போகும் ஒருவனுக்குப் பருக நீர் தந்ததால் அவன் உயிர் நிற்கிறது. நீ தந்தது வெறும் தண்ணிர்தான்; காசு இல்லாமல் கிடைப்பது; என்றாலும் ஓர் உயிரைக் காப் பாற்ற முடிந்தது. இது காலத்திற் செய்த உதவி; இதற்கு ஈடு எதனைக் கூற முடியும்? ஞாலமே தந்தாலும் இதற்கு ஈடு ஆகாது; உதவி தினை அளவுதான்; பயன் பனை அளவு என்பதை மறக்க முடியாது. எனவே தூய உள்ளம் படைத்த இந் நல்லோரின் தொடர்பை எப்பொழுதும் மறக்கக்கூடாது; அவர்கள் உறவு நிலைத்து இருப்பது தக்கது; துன்பத்தில் துயர் துடைத்தவர்களை அன்பர்களாகக் கொள்க. எழு பிறப்பும் தம் துன்பத்தைத் துடைத்தவனின் நட்பை மறக்கக் கூடாது; இந் நல்லுறவை நட்பாக மதிப்பது ஒட்பமாகும்.