பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30

அவனைத் தாங்கிக் கொண்டுதான் இருக்கிறது; தன்மீது நிற்பவனைச் சாய்த்துவிடுவதில்லை.

பொறுமையும் அப்படித்தான்; எதிரி எவ்வளவு தீமைகள் தொடர்ந்து செய்தாலும் அவற்றைத் தாங்கும் சக்தி ஒருவனுக்கு வேண்டும்; நிலம் அவனுக்குச் சொல்லித்தரும் பாடம் இது.

பிறர் செய்யும் தவறுகளை எப்படிப் பொறுத்துக் கொள்வது என்று கேட்கலாம்; எளிய வழி இருக்கிறது; அவற்றை உடனே மறந்துவிடு; பெரிய சுமை உன்னை விட்டு நீங்கிவிடும்; தூக்கி எறிந்துவிடு; பொறுப்பதே, தக்கது. அதனைவிட மறப்பது அதனினும் மேலானது ஆகும்.

பொருள் இருந்தும் விருந்தினரைப் போற்றாவிட்டால் அவன் வறியவனே ஆகிறான். அதேபோல அறிவுஇருந்தும் பிறர் தவறுகளை மன்னிக்காவிட்டால் அவன் சிறியவனே. அதற்குத் தக்க மனவலிமை வேண்டும்; அதனை ஒருவன் உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.

ஒறுத்துப்பார்; அதனால் வெறுப்புகள்தாம் மிஞ்சும்; பொறுத்துப்பார்; அதனால் உன் புகழ் எஞ்சும்; உன்னைத் தங்கமான மனிதன் என்று எங்கும் எப்பொழுதும் போற்றுவர். பதிலுக்குப் பதில் தீமை செய்துவிடலாம். அஃது ஒரு நாளைக்குத்தான் மனநிறைவைத் தரும். பொறுத்தால் பொன்போல் ஒளிவிடுவாய்; பொன்றும் துணையும் புகழ் நிற்கும்.

அவன்தான் மடையன்; தவறு செய்கிறான்; அதற்கு நீயுமா திருப்பித் தீமை செய்ய வேண்டும்? அவனைவிட நீ உயர வாய்ப்பு உள்ளது. பயன்படுத்திக்கொள்; நல்லதே செய்க.