பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
52


கோபம் சண்டாளம் என்பர்; கோபம் இருந்தால் எதனையும் சாதிக்க முடியாது. அதனை விட்டுவிட்டால் நினைத்த எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியும்.

கோபத்துக்கு இரையானால் யாரும் உன்னை மதிக்க மாட்டார்கள்; பழகமாட்டார்கள்; ஒதுக்கிவிடுவார்கள். ஏன்? செத்தவனுக்குச் சமானமாகிவிடுவாய்.

சினத்தைத் துறந்துவிட்டால் நீ துறவிக்குச் சமானம் ஆவாய்; எந்தத் துன்பமும் உன்னைப் பாதிக்காது; உன்னால் எந்தத் தீமையும் நேராது என்று அனைவரும் பழகுவர்; பயன் உண்டாகும்.

32. இன்னா செய்யாமை

‘வாழ்க, வாழ விடுக” இதுதான் வாழும் முறை: காட்டு விலங்குகள் பிற எளிய விலங்குகளை அடித்துத் தின்றால்தான் அவை உயிர் வாழமுடியும்; அது காட்டு நெறி. மனிதன் மிருக நிலையைக் கடந்து அறிவுடன் வாழக் கற்றிருக்கிறான். அவன் மற்றவர்களைக் கெடுத்துத் தான் வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; அடுத்தவனைக் கெடுக்காமல் அழகாக வாழ முடியும். அதுதான் அறநெறி.

பதவி வருகிறது என்றால் மற்றவனைக் கீழே தள்ளி விட்டு நீ மேலே உயரலாம் என்று ஆசைப்படுவது அநாகரிகம்; பொறுத்திருந்து நீ உயர முயற்சி செய்; அது நிலையானது. சிறப்பும் செல்வமும் கிடைக்கும். பிறர்க்குக் கெடுதி செய்யாதிருப்பது மாசு நீங்கிய மனத் தினரின் கொள்கையாகும்.