பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
69


நூல்களைக் கற்று அறிவை வளர்த்துக்கொள்ளாத ஒருவன், அறிவுள்ள கருத்துகள் ஒருசில வெளியிட முற்படலாம். அவை சரியானவை என்று பட்டாலும் அறிவுடையார் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; நூற் சான்றுகள் காட்டாமல் எதனைக் கூறினாலும் ஏற்க மாட்டார்கள். சட்டம் படிக்காமல் வழக்கு மன்றத்தில் வாதாட முடியாது; இயற்கை அறிவுமட்டும் போதாது; கல்வி அறிவு மிக்கு வேண்டும். அவர்களால்தாம் வாதங்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியும்; இல்லையென்றால் தோல்வியை அடைந்துவிடுவார்கள். இவர்கள் பேச்சுக்கும் விவாதத்துக்கும் ஈடுகொடுக்க இயலாது; வெறும் களர் நிலம் போல்வர் எனக் கருதப்படுவர்.

மேற்போக்காகக் கல்வி கற்று இருக்கலாம்; அதனால் ஒருவன் தன்னைக் கற்றவன் என்று கூறிக்கொள்ள முடியாது; மண்பொம்மை நிறம் தீட்டப்பெற்று இருக்கலாம்; அதனால் அதற்கு உயிர் உண்டு என்று கூறமுடியாது; அதனை வாரி எடுத்து அணைத்துக்கொள்ள முடியாது. நுண்மையான அறிவும், நிறைந்த புலமையும் உடையவரே கற்றார் எனப்படுவர்.

கல்விச் செல்வம் இருந்தால்தான் தற்காப்போடு வாழ முடியும்; வறுமை இருந்தாலும் செம்மையாக வாழ முடியும்; அதற்கும் கல்வி வேண்டும்; பொருட்செல்வம் இருந்தால் அதனைப் போற்றிக் காக்கவேண்டும்; ஞான சூனியராக இருந்தால் எளிதில் ஏமாற்றம் அடைந்துவிடுவர். நூல் பல கல்லாதவன் விலங்குகளுக்கு நிகரானவன்.

42. கேள்வி

முறையாக ஆசானை அடுத்தும் நூல் பல கற்று அறிவு பெறுவது கல்வி எனப்பட்டது; அதனை மேலும் விருத்தி