பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
77


47. தெரிந்து செயல்வகை
(ஆராய்ந்து செய்யும் திறம்)

பெரியாரைத் துணைக்கொள்வதும் சிற்றினம் சேராமையும் அவரவர் தம் கடமைகளைச் செய்யவே ஆகும். தாம் மேற்கொண்ட செயல்களை எவ்வாறு திட்டமிட்டுச் செயல்படுத்துவது? அது தெரிந்து செயல்வகை எனப்படும். ஆராய்ந்து செயலில் ஈடுபடுதல் என்பது இத் தொடரின் பொருளாகும்.

ஒரு செயலைத் தொடங்குமுன் இதனால் ஆரம்பத்தில் நமக்கு ஏற்படும் இழப்பு யாது? ஆக்கம் யாது? என்று நிருணயிக்க வேண்டும். எந்தத் தொழிலும் தொடங்கும் போது அதிக இலாபம் எதிர்பார்க்க முடியாது. பின்னால் வரும் ஆதாயம் யாது என்பதையும் கணக்கில் இட வேண்டும்.

தொழில் தெரிந்த நண்பர் உதவியுடன் கலந்தாலோசித்து முடிவுசெய்ய வேண்டும்; அதனோடு நன்மை தீமைகளை ஆராய்ந்து செயலில் இறங்கவேண்டும். அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்.

இலாபம் வருகிறது என்று முதற்பொருளை இழக்கக் கூடிய செயல்களில் அறிவுடையவர் இறங்கமாட்டார்கள்; உறுதியாக நன்மை கிடைக்கும் என்று தெரிந்தால் அன்றி எந்தக் காரியத்திலும் இறங்கமாட்டார்கள்.

ஒரு செயலை எடுத்துக்கொண்டால் அதன் தன்மைகளை முழுவதும் ஆராய்ந்தே தொடங்க வேண்டும். சிறப்பாகப் போர்வினை தொடங்குவது என்றால் முன்கூட்டியே எல்லாவகையிலும் திட்டமிட வேண்டும். சேற்றில் காலை வைத்த பிறகு எடுக்க முடியாமல் திணற நேரிடும்.