இல்லறவியல் 41
15. பிறன் மனைவியை விரும்பாமை
உலகில் அறம் இன்னது - இப்பொருள் இத்தகையது என்று ஆராய்ந்து கண்டவரிடம், பிறன் உடைமைப் பொருளாயுள்ள ஒருத்தியைக் காதலித்துத் திரியும் மடமை இராது. 141
அறத்திற்குப் புறம்பான: கெடுவழியில் நின்றவர் எல்லாருக்குள்ளும், பிறன் மனைவியை எதிர்பார்த்து அவன் கொல்லைப் புறத்தில் நின்றவரினும் மடையர் யாரும் இல்லை. 142
நம்பியவரின் மனைவியிடம் தீது செய்து நடப்பவர் செத்தவரினும் வேறாக மாட்டார். 143
ஒருவர் எவ்வளவு சிறப்பு உடையவரானாலும், தம்மைத் தினையளவு ஐயுறாதவனுடைய மனைவியிடம் செல்லுதல் அவர்க்கு என்ன விளைக்குமோ? 144
எளிதாக எண்ணிப் பிறன் மனைவியிடம் முறைதவறி நடப்பவன், என்றும் அழியாது நிலைக்கும் பழியடைவான். 145
பிறன் மனைவியிடம் முறை தவறி நடப்பவளை விட்டுப் பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கும் விலகா. 146
அறப் பண்போடு இல்வாழ்பவன் எனப்படுபவன். பிறன் மனைவியின் பெண்மையை விரும்பாதவனே. 147
பிறன் மனைவியை ஏறெடுத்தும் பாராத பெரிய ஆண்மை உயர்ந்தோர்க்கு நல்லறம் மட்டுமன்று, நிறைந்த நல்லொழுக்கமும் ஆகும். 148
மிகுதியான நீர் (கடல்) சூழ்ந்த உலகில் நன்மை பெறற்கு உரியவர் யார் எனில், பிறனுக்கு உரியவளின் மார்பைத் தழுவாதவரே. 149
அறத்தைக் கடைப்பிடிக்காது, தீமைகள் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமை நல்லது. 150