பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 30. வாய்மை மனதிலே கரவும், செயலிலே களவும் ஒருவருக்கு உகந்ததல்ல. உயர்வும் அல்ல. களவுக்குள் கால் பதித்தவர்கள் வாழ்க்கை காலமெல்லாம் நலிவிலும் அழிவிலும் தான் கழியும் என்ற உண்மைகளை கள்ளாமை அதிகாரத்தில் கூறிய வள்ளுவர், கரவும் களவும் வாராதிருக்க, வாயும் மெய்யும் செம்மையாக இருக்க வேண்டும் என்று, வாய்மை அதிகாரத்தை அடுத்ததாக வைத்திருக்கிறார். வாய்மை என்றால் உண்மை என்று பொருள். சொல் என்று ஒரு பொருள். வலிமை என்றும் ஒரு பொருள். உண்மையை சொல்வதற்கு வலிமை வேண்டும் என்பதைத் தான் வாய்மை என்ற வார்த்தை வற்புறுத்துகிறது போலும். கற்கண்டை எந்தப் பக்கம் கடித்தாலும் இனிப்பது போல, வாய்மை என்ற சொல்லை எப்படிப் பிரித்தாலும் உண்மை என்ற அர்த்தத்தையே தருகிறது. வாய்+மெய் என்று இந்த சொல்லைப் பிரித்துப் பார்க்கிறோம். வாய் என்றால் வாக்கு, மெய், சொல் என்றும்; மெய் என்றால் உண்மை, திண்மை, நீதி, வாய் என்றும் பொருள்தருகின்றன. ஆகவே, உண்மை தான் உயிர் மூச்சான பொருளாக, வாய்மை தருகிறது. உள்+மெய் தான் உண்மை என உருவானது என்ற இந்த உள்ளும் மெய்யும், மீண்டும் வாய்மையைத் தான் சுட்டிக் காட்டி நிற்கின்றது. அகத்தில் எழுகின்ற மன வெழுச்சியின் அந்தரங்கம், உண்மை ஆகிறது. அந்த உண்மையானது இயல்பானது. உடலிலேயே எதார்த்தமாக விளங்குவது. அறிவாகத் திகழ்வது. மனதில் சான்றாக வெளிப்படுவது. ஆகவே, இருளற்ற சிந்தையிலிருந்து வெளி வருகிற இனிய குரலே வாய்மையாகும். துறவியருக்கு மட்டும்தான் வாய்மை வேண்டுமா என்றால், மனித உடல் கொண்ட மாந்தர் அனைவர்க்கும் வேண்டிய ஒன்று தான் வாய்மை. வாய்மை மிகுந்தால் தூய்மை வரும். வாய்மை குறைந்தால் கீழ்மை வரும். கீழ்மையான வாழும் முறைக்கு கீழ்க்கை என்று பெயர். கீழ்க்கையை வாழ்க்கையாகக் கொண்ட மனிதன், கினிதன் என்று அழைக்கப்படுகின்றான். கினிதன் என்றால் பீடைபிடித்தவன். நோய் பிடித்தவன். ஆகவே, வாய் மை எனும் நிலை, கள்ளாமைக்குப் பிறகு வருகிறது. பள்ளத்தை நோக்கியே வெள்ளம் பாயும். கள்ளத்தை நோக்கியே உள்ளம் தோயும். கள்ளத்திலிருந்து கரையேறி விட்டால், காட்சியும் இனிது, புலன் மாட்சியும் இனிது. பெறுகின்ற எண்ணமும் இனிது. பேசுகின்ற மொழியும் இனிது. அந்த இனிய நிலையின் எழுச்சியே வாய்மை என்று வழங்கப்படுகிறது. நல்லோர்களால் வாவேற்கப்படுகிறது.