பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 31. வெகுளாமை கொப்பளிக்கும் கோபத்திற்குக் கப்பம் கட்டுகிற ஒரு . காரியத்தைச் செய்கிற கொடுரமான நடவடிக்கை வெகுளி என்பார்கள். இந்த வெகுளியானது வேண்டாதவரை விலக்கவும், அவர்மீது வெறுப்பைக் காட்டி வெருட்டவும், தன்னுடைய இயலாமையை வெளிப்படாமல் தடுக்கவும், இவ்வாறு தடைபோட்டுத் தடுத்துத் தன்னைக் காத்துக் கொள்கிற சுய நல வேலைதான் வெகுளியாகும். வெகுளி என்றால் வெருட்டுதல் என்று அர்த்தம். வெருட்டுதல் என்றால், மற்றவரை அச்சப்படுத்துதல், அச்சுறுத்துதல் என்று அர்த்தம். வெகுளியைக் கோபம் என்பார்கள். கோபம் என்றால் உடம்பு எரிச்சல் என்று ஒரு பொருள் உண்டு. வெகுளி என்றால் சினம் என்பார்கள். சினம் என்றால் தணியாக் கோபம் என்றும், பெருங்கோபம் என்றும், பிரமிப்புடன் சுட்டிக் காட்டுவார்கள். கோபமாகிய உடல் எரிச்சலும், சினமாகிய மன வெறுப்பும்தான் ஒருவருக்கு வெகுளித் தீயை உக்கிரமமாகப் பற்ற வைக்கிறது. அந்த ஆலவாய்த் தீயானது, ஆன்மத் தீயாகப் பற்றித் தீய்த்துவிடும். அதனால்தான் வள்ளுவர், கோபமும், சினமும் கொள்ளாத வெகுளாமெய்யுடன் வாழ வேண்டும். என்று விரும்புகிறார். உள்ளத்திற்கு அமைதி தருவது உண்மை. உள்ளத்தைக் காயப்படுத்துவது பொய்மை. பொய் பேசுபவருக்குக் குழப்பம் அதிகரிக்கும். வார்த்தைகள் தடுமாறும், நீதிக்குப்புறம்பாக நெஞ்சம் கொந்தளிக்கும். நெருப்புப் பொறியாக நினைவுகள் கொந்தளிக்கும். வெகுளி எனும் தீ, தன்னையே எரித்துக் கொண்டு, தான் இருக்கும் இடத்தையும் எரித்து அழித்து விடும். ஆகவே, வாய்மையானது, வெகுளாமையை வளர்த்து, வற்றாத இன்பத்தில் நீராட்டுவதால், வாய்மையின் பின் வெகுளாமையை வள்ளுவர் வைத்திருக்கிறார்.