பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிரினும் ...!

11


இந்த உவமையிலுங்கூட, ‘உயிரைப் பாதுகாப்பது போல ஒழுக்கத்தைப் பாதுகாக்கவேண்டும்’ என்றா கூறி இருக்கிறார்? அதுதான் இல்லை. ‘உயிரைக் காப்பாற்றுவதை விட அதிகமாக ஒழுக்கத்தைக் காப்பாற்றியாக வேண்டும்’ எனக் கூறிவிட்டார். இவ்வுண்மையை உயிரினும் என்ற சொல் நமக்கு நன்கு விளக்கிக்கொண்டிருக்கிறது.

‘இருபது நூற்றாண்டுகளுக்குப் பிறகு, எந்த விஞ்ஞானியாவது ஒருவன் தோன்றி, இழந்த உயிரைத் திரும்பக் கொண்டு வந்தாலும் கொண்டு வரலாம். ஆனால் எத்தனை நூற்றாண்டுகளானாலும், இழந்து போன மானத்தைத் திரும்பக்கொண்டு வர எந்த விஞ்ஞானியினாலும் இயலாது என்ற விஞ்ஞான ஆராய்ச்சி உண்மையைக்கூட, வள்ளுவர் பெருமான் இந்த ’உயிரினும்' என்ற சொல்லால் அறிவித் திருக்கிறார் என்பதைக் கண்டு மகிழுங்கள்.

“உயிரினும் சிறந்த பொருள் வேறு எதுவுமில்லை” என்ற பலருடைய கருத்தைத் திருவள்ளுவர் மறுக்கிறார். “ஒன்று இருக்கிறது; அது ஒழுக்கம்தான்” என அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். இப்போராட்டத்தை, இக்குறளில் உள்ள “உயிரினும்” என்ற ஒரு சொல் நமக்குப் போராடிக் காட்டுகிறது.

உயிரையுடைய எவரும் உயர்ந்தவராகக் கருதப்படுவதில்லை. ஒழுக்கம் உடைய சிலரே உயர்ந்தவராகக் கருதப்படுவர். ஆதலின் உயிரைக் காப்பதைவிட ஒழுக்கத்தைக் காப்பதே சிறப்பு என்பதை ‘உயிரினும்’ என்ற சொல் அறிவிக்கிறது.

மானத்தை இழப்பதா? அல்லது உயிரை இழப்பதா? என்ற ஒரு கொடிய நிலைமை ஏற்பட்டுவிட்டால், அந்த நிலையிலும் ‘மானத்தை இழ வாதே! உயிரை இழந்துவிடு!’ என்ற உயர்ந்த நெறியை வள்ளுவர் நமக்கு ‘உயிரினும்’ என்ற ஒரு சொல்லால் உணர்த்திக் காட்டுகிறார்.