பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



16

திருக்குறள் புதைபொருள்


சான்றாண்மைக்கு இலக்கணம் கூறவந்த வள்ளுவர் அதற்கு இருக்க வேண்டிய பல நல்ல குணங்களுடன் கொல்லாமையும் சொல்லாமையும் வேண்டும் என்று மட்டும் இக்குறளில் கூறியிருக்கவில்லை. பின்னதற்கு முன்னதை ஒப்பு நோக்கும் உவமையாகக்கூடக் கூறி இருக்கிறார் என்பதை அறியும்போது, நமது உள்ளம் பெருமகிழ்ச்சியடைகிறது.

கொல்லுதற்குரிய கருவி கிடைக்கப் பெறாத ஒருவன், கொல்லாது இருந்துவிடவும் முடியும்; அது எளிது. ஆனால் சொல்லுதற்குரிய கருவி "நா" இருந்தும், அதனை அடக்கி ஆண்டு கட்டுப்படுத்திச் சொல்லாதிருப்பதுதான் அரிது. ஆதலின் கொல்லாச் செயலைவிடத் தீமை சொல்லாச் செயலை இக்குறள் உயர்வுபடுத்திக் கூறுகிறது.

கொல்லுங் குணத்தைவிட, தீமை சொல்லுங்குணத்தைக் கொடுமையாகக் கூறி இருப்பது, கொலையுண்டவன் அப்போது மட்டும் துடிதுடித்துச் சாகிறான்; ஆனால் சொல்லுண்டவன் வாழ்நாள் முழுவதும் துடிதுடித்துச் சாகிறான் என்பதன் பொருட்டு எனத் தெரிகிறது.

கொலை வாளினும் கொடியது நாக்கு எனலாம். வாள் மனிதனை விட்டுச் சிலபொழுதேனும் பிரிந்திருக்கும். நா எப்பொழுதும் மனிதனுடனே இருந்து வரும். வாளால் சிலரையே வதைக்க முடியும். நாவாற் பலரை வதைக்க முடியும். "வாள்" கண்டவரையே கொல்லும். "நா" காணாதவரையும் கொன்றுவிடும். ஆகவே, வாளினும் வலிமை உடையது "நா" என்பது வள்ளுவர் கருத்து.

நாவினாற் சுட்டு வடுவை உண்டாக்குவதைவிட, தீயினாற் சுட்டுப் புண்ணை உண்டாக்குவது நல்லது என்று முன்பு ஒரு முறை கூறினார். தீமையைச் சொல்லிப் பல நாள் துன்புறுத்தும் கொடுமையைவிட, கொலையைச் செய்து ஒருநாள் துன்புறுத்தும் கொடுமை சிறியது என்று இக்குறளில் கூறுகிறார். இக்கருத்து நம் உள்ளத்தைச் சுடுகின்றது.