நிலமென்னும் நல்லாள்
25
அழிந்தொழிவார்கள் என்ற பேருண்மை இக் குறளிற் புதைந்து கிடக்கிறது.
பேய்கொண்ட, கள்ளுண்ட, பித்துண்ட, தாக்குண்ட மக்கள் அனைவருமே அறிவிழந்து நிற்பர். ஆனால் சினம் கொண்ட மக்களோ வாழ்விழந்து அழிவர் என்று வள்ளுவர் கூறுவது, அதன் கொடுமையைக் கடுமையாகக் காட்டுகிறது.
'சினம் என்பது எடுத்தவரைச் சுட்டு, அடுத்தவரைக் கொன்று, சேர்ந்தவரை அழித்து, சேராதவரைத் தீய்த்து, இனத்தையும் பகைத்து, இன்ப வாழ்வையும் கெடுக்கும் ஒரு கொடு நெருப்பு. ஆதலின் அதனைக் கொள்ளாதிருப்பது நல்லது' என்பது இக் குறளின் திரண்ட கருத்து.
வளர விரும்பும் மரங்கள் நெருப்பேற்கக் கூடாது; வாழ விரும்பும் மக்கள் சினம் ஏற்கக்கூடாது என்பது இக்குறளின் முடிவு.
இவ்வொரு குறளில் இவ்வளவு கருத்துக்கள் இருக்குமானால், இன்னும் 1329 குறள்களில் எவ்வளவு இருக்கும்? எடுங்கள் குறளை! படியுங்கள் நன்றாக! உணருங்கள் உண்மையை! அவ்வளவோடு நிறுத்திவிடாதீர்கள்! செய்கையிலும் செய்துகாட்டிச் சிறப்பெய்தி வாழுங்கள்.
வாழட்டும் தமிழகம்!
5. நிலமென்னும் நல்லாள்
இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்
என்பது திருக்குறளில் ஒரு குறள். இது உழவு என்னும் தலைப்பில் உள்ளது.
பண்புடைமையை, நாணுடைமையை, குடிப்பெருமையைக் கூறிய பின்னும், வறுமையை,இரவை, இரவச்சத்தைக்