பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிலமென்னும் நல்லாள்

29


பெண் மக்களின் நல்வாழ்வுக்கு, ஆண்மக்கள் எவ்வளவு இன்றியமையாதவர்களோ, அந்த அளவிற்கு நிலங்களின் செழிப்பிற்கும், ஆண்மையுள்ள மக்கள் இன்றியமையாதவர்கள் என்பது இக் குறளால் பெறப்படும் உண்மையாகும்.

இருப்பாரை என்ற சொல்லுக்கு மாறாக, 'இரப்பாரை' என்ற சொல் அமைந்திருக்க வேண்டும் எனக் கருதுபவரும் உண்டு. அவ்வாறாயின், உழைத்து உண்டு வாழ நிலமிருந்தும் இரந்து உண்டு வாழ விரும்புவது இழிந்த செயல் என்பது பொருளாகும்.

நிலமென்னும் நல்லாள் முயற்சியுடைய ஆண்மகனுக்குச் செல்வமனைத்தும் வழங்குவாள். நல்லாளாகிய இல்லாள் அன்புடைய கணவனுக்கு அனைத்தையும் வழங்குவாள் என்பது இக்குறளின் திரண்ட கருத்தாகும்.

2000 ஆண்டுகளுக்கு முன்தோன்றிய வள்ளுவர் பெருமான் வாக்கிலிருந்து இன்றைய வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும், தொழிலாதார அறிவை வளர்க்கவும், பொருளாதார நிலையை உயர்த்தவும் தோன்றிய இக் குறளை இன்னும் ஒருமுறை படிக்கிறீர்களா? படியுங்கள்.

        இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
        நிலமென்னும் நல்லாள் நகும்

நகைத்து விட்டுவிடும் இக் குறளைப்போல நீங்களும் இதனைப் படித்து விட்டுவிடாமல் பயன்படுத்திக்கொள்வது நல்லது.

வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் உழவுத் தொழில்!