பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

திருக்குறள் புதைபொருள்


இவ் ‘அளவு’ கூறியும், வள்ளுவரது உள்ளம் அமைதி பெறவில்லை. “ஒன்றின் உயிரைக் கொன்று, அதன் ஊனை உண்ணாமைக்கு ஆயிரம் வேள்வியும் ஈடு ஆகா” என எண்ணுகிறார். எண்ணியபிறகு, “அதனினும் இது நல்லது” என்று கூறிவிட்டார். இவ் உண்மையை வேட்டலின் என்ற சொல்லே அறிவித்துக் கொண்டிருக்கிறது.

இந்த ஆயிரம் வேள்விகளையும் வேள்வி என்று பொதுவாகக் கூறிவிடாமல், ‘நெய்யை ஊற்றிச் செய்யப்படும் வேள்விகள்’ என்று குறிப்பிட்டிருப்பது பெரிதும் நயம் உடையதாகக் காணப்படுகிறது. இதனை “அவி சொரிந்து” என்ற இரு சொற்கள் காட்டுகின்றன.

உயிரை வதை செய்து செய்யப்படும் வேள்விகளை ஊன் உண்ணாமைக்கு ஒப்பிட்டுக் கூற வள்ளுவரது உள்ளம் ஒப்பவில்லை என்பதை இக் குறள் வெளிப்படையாகவே காட்டி விடுகிறது.

“வேள்வி வேட்டலைவிடப் புலால் உண்ணாமை உயர்ந்தது” என்று இக் குறள் கூறுவது எதன்பொருட்டு? என எண்ணிப் பார்க்கும்பொழுது வேள்வியில் தன் நல விருப்பும் புலால் உண்ணாமையில் தன் நல மறுப்பும் கலந்திருப்பதன் பொருட்டு! எனத் தோன்றுகிறது,

வடமொழி எதை நல்லது! சிறந்தது! உயர்ந்தது! என்று இன்றும் கூறிக்கொண்டிருக்கிறதோ, அதைத் தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஏற்கவில்லை என்பதை இக்குறள் இன்றும் கூறிக்கொண்டிருக்கிறது.

உயிர்களைக் கொன்று, அதன் ஊன் முதலியவைகளை வேள்வித் தீயிற் கொட்டி, விண்ணவரை மகிழ்வித்து வேண்டியவைகளைப் பெறலாம் என்பது வேதங்களின் கருத்து. அவ்விதமாயின் புலாலுண்ணும் தேவர்களைவிட உண்ணாதிருக்கும் மக்கள் நல்லவர்கள் என்பது இக்குறளின் கருத்து.

குறளை மறுபடியும் படியுங்கள்.

        அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
        உயிர் செகுத்து உண்ணாமை நன்று