பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

திருக்குறள் புதைபொருள்


இரு கூறுபட்ட உடலும் உயிரும் மாறுபட்டும், வேறுபட்டும் தோன்றாமல், ஒன்றுபட்டுத் தோன்றுகின்ற இந்நிலையை வள்ளுவர் “நட்பு” என்று இக் குறளில் குறிப்பிடுவது மிகுந்த பொருளமைதியுடையதாகும்.

உயிர் வருந்தினால் உடல் இளைத்துவிடுகிறது. உடலில் ஊசி குத்தினால் உயிர் துடிக்கிறது! ‘என்ன உடம் போடு உயிரிடை நட்பு?’ என்று எண்ணிப் பார்க்கச் செய்கிறது இக்குறள்.

உடல் தோன்றும்போதே உயிரும் தோன்றி, உயிர் பிரிந்தபோதே உடலும் அழியத் தொடங்குவதைக் காணும் பொழுது, “நட்பு” என்பது இம்முறையில்தான் இருக்க வேண்டும் என்று இக் குறள் கூறாமற் கூறுவதாகத் தோன்றுகிறது.

‘நட்பு’ என்ற தலைப்பிலும் கூறப்பட்டிராத இந்த உயர்ந்த கருத்தை ‘நிலையாமை’ என்ற தலைப்பில் வைத்துக் கூறியிருப்பதைக் காணும்பொழுது, இது நட்பை விளக்க வந்ததா? நிலையாமையை விளக்க வந்ததா? என்ற ஐயம் தோன்றுகிறது. எனினும், இவ்விரண்டையுமே விளக்க வந்தது என்று கொள்வது தவறாகாது.

“உடலைத் தனித்துவிட்டு உயிர் ஓடிப் போய்விடும்” என்று மட்டும் கூறினாற் போதாது என எண்ணி, வள்ளுவர் அதற்கொரு உவமையும் தேடிப்பிடித்து இக் குறளிற் புகுத்தியுள்ளார். அது “குடம்பை தனித்து ஒழிய, பறவை பறந்து போவதுபோல” என்பதே.

“குடம்பை” என்ற சொல்லுக்குக் கூண்டு என்றும் முட்டை என்றும் பொருள் கூறலாம். இவற்றில் வள்ளுவர் எடுத்துக் காட்டியது கூண்டையா? முட்டையையா? என்று இக்குறள் நமக்கு ஒரு ஐயப்பாட்டை உண்டாக்குகிறது.

‘ஒழிய’ என்ற ஒரு சொல் இக்குறளிலிருந்து அழிவைக் குறிப்பிடுவதால், பறவை வெளிப்பட்டதும் கூண்டு அழியா