பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

திருக்குறள் புதைபொருள்


ஆதி பகவனையும் அகரம் விட்டுவிடவில்லை, அவனைப் பருப்பொருளாகவும், நுண்பொருளாகவும் காட்டுகிற காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். அகரத்தின் 1, உ, ம என்ற மூன்று துண்டுகளும் கடவுள், உயிர், மாயை என்றாகின்றன. ம, மாயையின் முதல் எழுத்து. உ, உயிரின் முதல் எழுத்து. 1 தனிக்கோடு இறைவனது அரு உரு. இது அகரம் காட்டுகின்ற ஆதிபகவனின் பருப்பொருளாம். அடுத்து நுண் பொருள்!

எழுத்துக்கள் எல்லாவற்றிலும் ‘அ’ நுண்ணியதாகக் கலந்தே உள்ளது, க் + அ, = க,ப்+அ =ப,ம்+அ+இ,= மி, த்+அ+உ.=து. ‘அ’ கலவாத எழுத்தே இல்லை. ஒலியும் அப்படியே. எதை ஒலிக்க வாயைத் திறந்தாலும் ‘அ’ எவ்வளவு நுண்பொருளாக மறைந்திருக்கிறதோ, அவ்வளவு நுண்பொருளாக ஆதிபகவனும் இவ்வுலகில் மறைந்து காணப்படுகிறான் என்பது வள்ளுவரது முடிவு!

அ, உ, ம என்ற மூன்றையும் கடவுள், உயிர், மாயை எனக் கண்டோம். சித்தாந்திகள் இதனைப் பதி, பசு, பாசம் என்பர். இவற்றின் நிலைமையை அகரம் அப்படியே காட்டுகிறது. உற்று நோக்கினால் குறளில் உள்ள உலகையே அகரத்துள் காணலாம். காணுங்கள்! முதலில் மூன்று துண்டுகளையும் ஒன்று சேர்த்து அகரமாக்கி உற்று நோக்குங்கள்.

“தனிக் கோடாகிய இறைவன், உயிர் தன்னை வந்து அடையட்டும்” எனக் கருணை காட்டி உயிர் முன் வந்து நிற்கிறான்.

‘உ’ என்ற உயிர் இறைவனை அடையத் துடியாய்த் துடித்து அவன் பக்கம் நீண்டு செல்லுகிறது,

‘ம’ என்ற மாயையானது உயிரை முழுதும் பற்றிக் கொண்டு, இறைவனையடையவிடாமல் தடுத்து, தலை கீழாகத் தொங்கி ‘எ’ இவ்வுலகுக்கு இழுக்கிறது.