பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



4


குறளுக்கு உள்ள சிறப்புக்கள் பல. அவற்றுள் ஒன்று அதன் ஒப்பற்ற இயல்பு. அது சிறியவர்களைக் கண்டால் நெருங்கியிருந்துகொண்டு கருத்துக்களை வெளிப்படையாகவே அள்ளி அள்ளி ஊட்டுவதும், அறிஞர்களைக் கண்டு விட்டால் எட்டியிருந்து உயர்ந்த கருத்துக்களைக் கொண்டு சிறந்த விருந்தளித்து வருவதுமாகும்.

இந் நூலில் 12 குறள்கள் ஆராயப் பெற்றுள்ளன. முதல் எட்டுக் குறள்களில் புதைபொருள்களும், பின் நான்கு குறள்களில் மறைபொருள்களும் விளக்கப் பெற்றுள்ளன. மாறுபட்ட பொருள்கள் தமிழகப் பேரறிஞர்களால் ஏற்கப் பெறுமானால் மகிழ்வேன். தவறுகள் இருந்து திருத்தப்பெறுமானால் ஏற்பேன்.

திருக்குறளை மேற்போக்காகப் படிப்பதைவிடச் சிறிது கருத்துான்றிப் படிப்பது நல்லது. அதுவும் அறிவதற்காக, போதிப்பதற்காக, எழுதுவதற்காக, பேசுவதற்காக என்று இல்லாமல் "நடந்து ஒழுகுவதற்காக" என்று படிப்பது நல்லது!

என்னால் இயன்ற அளவு செய்யும் இலக்கியத் தொண்டுகளில் ஒன்று இது. தமிழக மக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது எனது விருப்பம். இதை எழுதும்படி இடைவிடாது தூண்டிய அன்பர்களுக்கு என் வணக்கம். இதனை நல்ல முறையில் வெளியிட்டு உதவிய பாரி நிலையத்தாருக்கு எனது நன்றி. மதிப்புரை வழங்கிய பெரும் பேராசிரியருக்கு எனது நன்றியும், வணக்கமும்!

திருச்சிராப்பள்ளி,

தங்கள் அன்பிற்குரிய,

1—7—1956

கி.ஆ.பெ. விசுவநாதம்