பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

கூறலைக் கோள்மூட்டல், மூட்டல் எனவுங் கூறுவதுண்டு.

புறம் என்பது “ஒன்றிலிருந்து வேறானது” என்றாகும். கூறப்படுபவனும் புறம், கூறுபவனும் புறம், கேட்பவனும் புறம், இடமும் புறம், செய்தியும் புறம் ஆகும். ஆதலின் இதுபற்றிக் கூறுதல் “புறங்கூறல்” என வந்தது போலும்.

“பக” என்பது இரண்டெழுத்துள்ள ஒரு சொல். இச்சொல்லை ‘பகு - அ’ எனப் பிரித்து பகுக்க; பிரிக்க, நீங்கு மாற்றால் எனச் சுற்றிவளைத்துப் பொருள் காண்பதை விட “வெறுக்க” எனப் பொருள்காண்பது நல்லது எனத் தோன்றுகிறது. அவ்வாறாயின், வெறுக்கக் கூறுதல் என்பதே புறங்கூறல் என்றும், புறங்கூறல் என்பதே வெறுக்கக் கூறுதல் என்றும் அமையும்.

புறங்கூறுதலை புறஞ்சென்று கூறுதல் என்பர். அதுவும் நல்லவைகளையல்ல; தீயவைகளை. அதையும் அவரிடமல்ல; பிறரிடம் என்பர். இதனால் புறங்கூறுதல் என்பது ஒருவரைப் பற்றித் தவறான கருத்துக்களை அவரில்லாதபோது பிறரிடம் கூறிக்கொண்டிருப்பதை என நன்கு விளங்குகிறது. இது வெறுக்கத்தக்கது என்பது வள்ளுவரது கருத்து. இதனை இக்குறளிலுள்ள “பகச்சொல்லி” என்பது நமக்கு அறிவித்துக்கொண்டிருக்கிறது.

புறங்கூறும் செயலானது தொடக்கத்தில் புறங்கூறப் படுபவனை வெறுக்கச் செய்யும். அடுத்து சொல்பவனை வெறுக்கச் செய்யும். எனவே புறஞ்சொல்லல் என்பது வெறுக்கச் சொல்லல் என்றாகிறது. இதனையே “பகச்சொல்லி” என்பதும் சொல்லுகிறது போலும்.