பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16


பகச்சொல்லும் கொடுமை பண்பற்றவரது செயல். அது மக்கட் சமுதாயத்திற்கே வேண்டாத ஒன்று. அது தன்னையுடையவனை ஒரு இழிந்த மகனாகக் காட்டி, சுற்றத்தினரையும் வெறுக்குமாறு செய்துவிடும். ஆகவே புறங்கூறும் பழக்கமுடைய ஒருவன் சுற்றத்தார்களிடையே வாழத் தகுதியற்றவன் என்பது இக்குறளின் கருத்து. இவ்வுண்மையை, இக்குறளிலுள்ள “பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்” என்ற சொற்றொடரால் நன்கறியலாம்.

கேளிர்ப் பிரிப்பர் என்பது கேளிரைப் பிரிப்பர் எனறாகும். இதனால் சுற்றத்தார்களைப் பிரிந்து வாழும் வாழ்வு எவ்வளவு உயர்ந்ததாக இருப்பினும், அது ஒரு சிறந்த வாழ்வாக இராது என்பதையும், அத்தகைய ஒரு சிறந்த வாழ்வைப் புறங்கூறும் ஒருவன் அடைய முடியாது என்பதையும் இக்குறள் கூறி, நம்மை எச்சரிக்கை செய்வதாக எண்ணவேண்டியிருக்கிறது.

கேளிர்ப் பிரிப்பர் என்பது கேளிரையும் பிரிப்பர் என்றுமாகும். இதனால் புறங்கூறும்கொடுஞ்செயலானது தன்மீது பற்றுக்கொண்டுள்ள உற்றார் உறவினரையும் பிரித்து வைத்துவிடும் என்றாகிறது. “சுற்றத்தார்களையும் பிரித்து வைத்துவிடும்” என்பதனால், பிறரை என்னென்ன செய்யும் என்பதையும் இக்குறள் கூறாமற் கூறியிருப்பதாகக் கொள்ளவேண்டியிருக்கிறது.

உற்றார் உறவினர்களிடம் இருந்து பிரிவதால் தமக்கு ஒரு கேடுமில்லை என எவரும் எண்ணிவிட முடியாது. ஏனெனில், சுற்றத்தார்களிடமிருந்து ஒருவன் எவ்வளவு தூரம் பிரிந்து செல்லுகிறானோ, அந்த அளவிற்கு அவன் வேண்டாதவர்களை நெருங்கிவிடுகிறான். எனவே, “சுற்றத்தார்களிடமிருந்து பிரியாயிலிருக்க வேண்டும் என்பதற்காகவாவது புறங்கூறாதே” எனப்