பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

“ஆன்றவிந்து அடங்கல்” என்ற சொற்களே இதனை மெய்ப்பிக்கும்.

இத்தகைய அடக்கமும் பலவகையாம். அவற்றுள் தலைமை வகிப்பன மூன்று. அவை மனஅடக்கம், நாவடக்கம், உடலடக்கம் என்பன. இவை மூன்றும் தீய எண்ணங்களை எண்ணாமை, தீய சொற்களைச் சொல்லாமை, தீய செயல்களைச் செய்யாமை என்றாகும்.

அடக்கம் இன்பத்தையும், அடங்காமை துன்பத்தையும் தருமாதலின் வாழ்வைச் செம்மைப்படுத்தி உயர்த்த இன்றியமையாத ஒன்று “அடக்கம்” என்பதையே, இக் குறள் வற்புறுத்துகிறது.

எதையும், எதிலும் அடக்க வேண்டுமானாலும், அது ஒரு பொருளாக இருந்தாகவேண்டும். இன்றேல், அது அடங்கவும் செய்யாது; அடக்கவும் முடியாது. அடங்குதல் என்றுமாகாது. ஆகவே, அடக்கம் தானாகவே ஒரு பொருளாகிவிடுகிறது. அதை எண்ணியே அடக்கத்தை ஒரு பொருளாக மதிக்கும்படி வள்ளுவர் இக்குளிற் கூறுகிறார். இது எண்ணி எண்ணி மகிழக்கூடிய ஒன்று.

பயிரும், பொருளும் பாதுகாக்கத் தக்கவை. இன்றேல் இவை இரண்டும் அழிந்துபடும். அடக்கம் ஒரு பொருளாக ஆகும்பொழுது, அதைப் பாதுகாத்தாக வேண்டும் என்பதும் பெறப்படும். அதனாலேயே, “காக்க பொருளா அடக்கத்தை” என்று இக்குறள் நமக்குக் கடுங் கட்டளை யிடுகிறது.

காக்காவிடல் தீமை விளையும் என்பது மட்டுமல்ல, காப்பதால் நன்மை விளையும் என்பதும் வள்ளுவரது கருத்து. இதை இக்குறளிலுள்ள “ஆக்கம்” என்ற சொல் விளக்கிக்கொண்டிருக்கிறது.