பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23


அடக்கமான வாழ்வினாற் பெறுகின்ற ஆக்கம் மிக உயர்ந்த ஆக்கமெனவும், அதைவிடச் சிறந்த ஆக்கம் வேறில்லையெனவும், வள்ளுவர் அறுதியிட்டுக் கூறுகிறார். இதனை, "ஆக்கம் அதனினூஉங் கில்லை” என்பதால் நன்கறியலாம்.

“உயிர்” என்பது பொதுவாக அனைத்துயிரையும் குறிக்கும். எனினும், அறிந்து அடங்கிப் பயன்பெறுவது மக்களே ஆதலின், இது மக்கள் உயிரை மட்டுமே குறிக்க வந்ததாகும்.

ஆகவே, மக்களாய்ப் பிறந்தோரனைவரும் தங்களுக்குப் பெரும் பயனைத் தருகின்ற அடக்கத்தை ஒரு உயர்ந்த பொருளாகக் கருதி, நன்கு பாதுகாத்தாக வேண்டும் என்பது இக்குறள் கூறும் முடிவு.

நல்ல சொற்கள் பலவற்றோடு ஒரு தீச்சொல் கலந்து வருமாயின், அனைத்துமே தீய சொற்களாகிவிடும். தீயினாற் சுட்ட புண்கள் விரைவில் ஆறிவிடுவதைப் போல, நாவினாற் சுட்ட புண்கள் ஆறிவிடுவதில்லை. ஆகவே எதை அடக்கமுடியாவிடினும் நாவை அடக்கியே ஆகவேண்டும். இன்றேல் வாழ்வில் இழுக்குப்படும். மனஅடக்கமும், நாவடக்கமும் கொண்டு வாழ்கின்ற வாழ்வு மிகச் சிறிய வாழ்வாக இருப்பினும், அது மலையினும் உயர்ந்து காணப்படும் பெரு வாழ்வாக அமையும். ஆகவே, தம்பி! அடக்கம் என்னும் அருஞ்செல்வத்தை அடைந்து, அதை ஒரு பொருளாகக் கருதிப் போற்றி பாதுகாத்து வா; அது உன் வாழ்வின் தரத்தையே உயர்த்திவிடும்.

வாழட்டும் தமிழ்ப் பண்பு!
வளரட்டும் குறள் நெறி!