பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


ஆக்கம் என்பது அது உண்டாக்கும் மகிழ்ச்சியையும், கேடு என்பது அது விளைவிக்கும் துன்பத்தையும் பொறுத்தது. இதில் பொறாமைக் குணமுள்ளவன் தான் பெற்ற செல்வத்தால் மகிழ்ச்சியடைகிறானா? அஃதில்லாதவன் தான் பெற்ற வறுமையால் துன்பம் அடைகிறானா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? சிந்தித்துப் பார்!

சிறுமுள் தைத்தாலும் வாடிவருந்தும் நரியையும், உடல் முழுதும் அம்புகளால் துளைக்கப் பெற்றபோதும் பீடுநடை நடந்து தன் பெருமையை நிலைநிறுத்தும் யானையையும் காணும்பொழுது, செவ்வியனுடையதைக் கேடு என்று கூறுவதெப்படி? சிந்தித்துப் பார்!

“நினைக்கப்படும்” என்ற ஏழு எழுத்துக்களைக் கொண்ட ஒரு சொற்றொடர், இக் குறளிலிருந்து “நினைத்துப் பார்க்கவேண்டியவை” என்ற பொருளைத் தந்து, இத்தனை வகையாகவும் நம்மை நினைத்துப் பார்க்கச் செய்துவிட்டது. இக் குறள் தரும் பொருள் இதுதானா? இது சிந்தனையைத் தூண்டிவிடுவதோடு நின்றுவிட்டதா? “முடிவு” ஒன்றுமில்லையா? என்று கேட்கிறீர்கள்? இதோ முடிவு!

“அவ்விய நெஞ்சத்தானுக்கு ஆக்கமும், செவ்வியானுக்குக் கேடும் வராது. வந்தாலும், அவை ஆக்கமும் கேடுமாயிராது. இருந்தாலும், அவர் அவ்வியராகவும், செவ்வியராகவும் இரார். இருந்தாலும், அவர்கட்கு ஆக்கமும் கேடும் பழவினையால் வராது. ஒருக்கால் வந்தாலும் நிலைத்து நில்லாது” என்பதே. இக் குறளின் பொருள். இதனை இக் குறளிலுள்ள “நினைக்கப்படும்” என்ற இரு சொற்களும் விளக்கிக் கொண்டிருக்கின்றன. நினைக்க-நினைத்துப் பார்க்க, படும்-புலனாகும்.