பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

கிறது. இவ்வுண்மையை, இக்குறளிலுள்ள “அல்லவை தேய” என்னும் சொற்களால் நன்கறியலாம்.

இனியவை கூறலுக்கும் இக்குறள் ஒரு இலக்கணமாக அமைந்து நம்மை மகிழ்விக்கிறது. ‘மறம்’ எனக் கூறுவதும் “தீயவை” எனக் கூறுவதும் இன்னாதன என எண்ணி, “அறமல்லாதவை” “நல்லதல்லாதவை” என்ற இனிய சொற்களால் இக்குறள் அமைந்திருப்பது எண்ணி எண்ணி மகிழத்தக்கது.

“அறநெறியில் நிற்பார்முன் தீமைகள் நிற்கா” என்று நாலடியார் கூறியிருப்பது இக்குறளின் விளக்கமென்றே தோன்றுகிறது. இனிய சொற்களைத் கூறிப் பிறரை மகிழ்விப்பதும் அறச்செயல்களில் ஒன்றேயாம். இதனை, முகம் மலர்ந்து ஈவதிலும் அகம் மலர்ந்த இன்சொல் நல்லது என்ற குறளாலும் அறியலாம்.

“இன்சொல்” சொல்பவர்க்கு மட்டும் நலந்தருவ தல்ல. அது அதனைக் கேட்போர்க்கும் நலந்தருவதாகும், அவரும் இன்சொல் வயப்பட்டு அதனால் நல்லன நாடிச் செயல்பட முடிகிறது.

“நன்மை பயக்கும் ஒன்றைச் சொல்லும்போதுகூட அதைக் கடுஞ்சொற்களால் சொல்லக்கூடாது” என, நல்லவை நாடி இனிய சொலின் என்ற சொற்றொடர் நம்மை எச்சரிக்கை செய்துகொண்டிருக்கிறது.

“வன்சொல் துன்பம் தரும். அதுவும் தீயவை நாடிச் சொலின் பெருந்துன்பம் விளையும். அதனால் தீயவை வளர்ந்துகொண்டே வரும். அது மட்டுமல்ல, உள்ள அறமும்கூடத் தேய்ந்துவிடும்” என்பன இக் குறளில் புதைந்து கிடக்கும் பொருள்களாகும்.