பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

திருக்குறள் தமிழகத்தின் செல்வம். அதுவும் தமிழனின் சொந்தச் சொத்து. அது உலகின் ஒப்பற்ற செல்வங்களில் ஒன்றாக இன்றும் திகழ்த்து வருகிறது.

மனிதன் கேட்கக் கடவுள் சொன்னது பகவத்கீதை. கடவுள் கேட்க மனிதன் சொன்னது திருவாசகம். மனிதன் கேட்க மனிதன் சொன்னது திருக்குறள். அதுவும் வாழ்ந்து காட்டிய ஒரு பெருமகனால், வாழ வழிவகுத்துக் காட்டிய ஒரு வழிகாட்டி. இதனால் திறக்குறளை ஒரு வாழ்வு நூல் எனலாம்.

திறக்குறளை ஆழ்ந்த படிப்பதின் முலமே அதன் அரிய கருத்துக்களை அறிந்து மகிழ முடியும். என்னுடைய பல்வேறு தொழில்துறைத் தொல்லைகளுக்கிடையில் பன்னிரண்டு குறள்களை ஆராய்ந்து இதன் முதற்பாகத்தை வெளியிட்டேன். அதைப் படித்து மகிழ்ந்த அன்பர்களின் இடைவிடாத் தூண்டுகோலின் விளைவே இது.

இந்நூலில் பத்துக் குறள்கள் ஆராயப் பெற்றுள்ளன. தனது அருமையான நேரங்களில் சிலவற்றை ஒதுக்கி, இந்நூலினை முழுவதும் படித்துப் பாராட்டி மதிப்புரை வழங்கிய, சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, மாண்புமிகு ஜஸ்டிஸ் எஸ். மகராஜன் B. Sc., B.L. அவர்களுக்கு என் வணக்கம் உரியதாகட்டும்.

முதற் பாகத்தினைப் படித்து மதிப்புரை வழங்கிய பேராசிரியர் டாக்டர் அ. சிதம்பரநாதன் செட்டியார் அவர்களுக்கும், இந்நூலை வெளியிட இடைவிடாது தூண்டிய அன்பர்களுக்கும், இவற்றை நல்ல முறையில் அச்சிட்டு வழங்கிய பாரி நிலையத்தினருக்கும் என் நன்றி.

திருச்சிராப்பள்ளி,
தங்களன்பிற்குரிய,
கி. ஆ. பெ. விசுவநாதம்
5-11-74