பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48


தமிழர், முயல் வேட்டைக்குச் செல்லுவதைவிட யானை வேட்டைக்கு செல்லுவதையே பெரிதும் விரும்புவர். அவரது எண்ணம் அத்தகையது.

முயலைக் கொன்று வெற்றி பெறுவதைவிட, யானையை எய்து தோல்வியடைவதையே பெருமையாகக் கொள்ளுவர். அவரது கொள்கை அத்தகையது.

தம்மின் வலிமை குறைந்த எவரையும் தமிழர் தாக்குவதில்லை. மெலியோர் தம்மைத் தாக்க முன் வந்த போதிலும், வலியோர் அவர்களைத் தாக்காது, அவர்களை நோக்கி "போர் எண்ணங்கொண்டு என்முன் நிற்காதே; நின்றால் மடிந்து மண்ணிற் புதையுண்டு நடுகல்லாக நிற்பாய்" என்று கூறி அனுப்பிடுவிடுவர். அவரது அறம் அத்தகையது.

தம்மோடு ஒத்த அல்லது உயர்ந்த வலிமையுடையவரோடு மட்டுமே போரிடுவர். அப்போதுங்கூட பகைவனது வலிமை குறைந்துவிட்டால், மேலும் தாக்காமல் "இன்று போய் நாளை வா" என்று அவர்களை அனுப்பி வைப்பர். அவரது பேராண்மை அத்தகையது!

போர்க்களத்தில் பகைவரை வெகுண்டு நோக்குவர். விழித்துப் பார்க்கும் அக்கண்களை நோக்கி வேல்கள் பறந்து வரும். அப்பொழுதுங்கூட அவர்கள் விழித்த கண்களை இமைப்பதே இல்லை. அவரது போர் ஆண்மை அத்தகையது.

இவை போன்ற பழந்தமிழ் வீரர்களின் பண்பாட்டினைத் திருக்குறள் நிலைத்து நின்று இன்றும் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது.

இக்கட்டுரையின் தலைப்பில் இருக்கும் குறள் ஒரு போர் வீரனின் சிறந்த வலிமையைக் காட்டும் உயர்ந்த ஓவியமாகும்.