பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௮௬

முன்னுரை 


முதலிய சொற்களால் கடுமையாக இழித்துரைப்பது காண்க

மேலும், திருமணம் ஆகி இல்லறத்தில் ஈடுபட்ட பெண்ணை, இல்லாள் (52), மனைவி (60), (904) ஆகிய சொற்களால் குறிப்பதுடன், அவளுக்குச் சமநிலை தந்து வேறு எந்நூல் ஆசிரியரும் கூறாத நிலையில் 'வாழ்க்கைத் துணை' என்றும் பொதுமையும் உரிமையும் புலப்படுமாறு குறித்திருப்பது, தமிழியலை நன்கு புலப்படுத்திக் காட்டுவதாகும்.

இனி, திருக்குறளில் பெண்களைப் பற்றி முழுமையாகக் கூறும் அதிகாரங்கள் ஐந்து ஆகும். அவை, அறத்துப்பால், இல்லறவியலில் இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், பிறனில் விழையாமை, பொருட்பால், நட்பியலில் பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர் ஆகியவை. இவையன்றிக் காமத்துப்பாலில் பலவிடங்களிலும், நூலின் வேறு பகுதிகளில் சிற்சில இடங்களிலும் பெண்களைப் பற்றிய கூற்றுகள் வருகின்றன.

இல்லறவியலில் ஆண் எவ்வளவுதான் பொறுப்புடையவன், கடமையுணர்வுடையவன், தலைமை தாங்குபவன், குடும்ப உறுப்பினர்கள் (தாய், தந்தை, மனைவி, மக்கள், உறவினர், நட்பினர் அனைவரையும் இயக்கு பவன் (ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்கும் (48) தலைமைப் பொறுப்பு வாய்ந்தவன் ஆயினும், அத்தகைய இல்லற வாழ்க்கைக்கே அடித்தளமாக இருப்பவள் பெண்ணே ஆகிறாள் என்பது உலகியல் அவளை வைத்தே இல்லறக் கூறுகள் அனைத்தும் நிறைவு செய்யப் பெறுகின்றன. எனவேதான், பண்டைத் தமிழர் புறச் செயல்கள் அனைத்தும் ஆணை ஒட்டியே நிகழ்வதையும், அகச் செயல்கள் முழுவதும் பெண்ணை ஒட்டியே நிகழ்வதையும் உற்று நோக்கிக் கண்டு ஆணைப் புறத்துக்கு உரிய தலைவனாகவும், பெண்ணை அகத்துக்குரிய தலைவியாகவும் மதித்துப் போற்றி ஒழுகினர். அதனாலேயே, பெண்ணை, அகமுடையாள், அகத்துக்காரி, அகத் துக்குரியவள்), மனைவி (மனைக்குரியவள். இல்லாள் இல்லத்துக்குரியவள்) கிழத்தி தலைவனுக்கும் அவனைச் சார்ந்த அனைத்துக்கும் உரியவள்) என்று உரிமைப் பொருளும், பெருமைப் பொருளும் தோன்ற (விதந்து சிறப்புப் பெறக் கூறினர்.

இவ்வகையில், இல்லறவியலில் நிகழும் இல்வாழ்க்கை மக்கட்பேறு, அன்புடைமை, விருந்தோம்பல் முதலிய அத்தனைச் சிறப்பியல் கூறுகளும், இல்லறத் தலைவியாகிய ஒரு பெண்ணை முதன்மையாகக் கொண்டே இயங்குவனவாகத் திருவள்ளுவப் பேராசான் உறுதிப்படுத்தினார், என்க. இதனை, அவர்.

'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது'