பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௦௫



இவற்றுள் இவ்வகையில், உடலியல் உணர்வு மிகுந்து தோன்றுவோர்க்குப் பெண்ணின்பத் தொடர்புணர்வும் மற்றவர்களைவிட மிகுதியாகவும், அளவுக்கு அதிகமாகவும் இருக்கும். அவ்வாறிருப்பவர், இரவு, பகல், தனிமை, பொதுமை, வீடு, காடு என்னும் வேறுபாடான, காலம், இடம், சூழல் என்று இல்லாமல், எப்பொழுதும் பெண்ணின்ப உணர்வுகளொடு, உரை, செயல், ஈடுபாடு முதலிய நிலைகளில் ஈடுபாடாக இருப்பர் வாய்ப்பு நேரும் பொழுதெல்லாம், எந்த ஒரு பெண்ணையும், தன்னுணர்வுக் குட்படுத்தி, அவளுடன் உடலுறவு கொள்ளும் எண்ணத்துடனேயே இருப்பர்; இயைபு கிடைப்பின் உடலுறவும் கொள்ளுவர். அவ்வகையில் அத்தகைய பெண்களும் அவ்வுணர்வு மிகுந்த கூறுகளைக் கொண்டவர்களாகவே இருப்பர். இவ்வாறான ஆண்களாலும் பெண்களாலுமே, கற்பழிப்பு முதலிய பாலியல் கொடுமைகளும் மிகுதியாக உலகில் நிகழ்ந்துவருகின்றன.

இவ்வுடலுணர்வு மிகுந்துள்ள ஆண்கள் அல்லது பெண்கள் அல்லது இருதரத்தினரும், கணவன் மனைவியராக ஆகும் நிலை ஏற்படின், அவர்கள் இருவரும் ஒத்தோ, அல்லது ஒருவரின் துண்டுதலாலும் வற்புறுத்தலாலும் அல்லது கட்டாயத்தாலுமோ, ஒருவர்க்கொருவர் உடலுணர்வு கொண்டு நுகர்ச்சியின்பம் பெறுவர், இவர்கள், தம் இளமைக் காலம் உள்ள வரையிலுமோ, அல்லது நல்ல உடல் வளம் கொண்டிருப்பவர் முதுமை வரையிலுமோ, இத்தகைய ஈடுபாடுகளிலேயே நாட்ட முடையவராக இருப்பர், இவர்களுக்கு, அவரவர் அறிவாற்றலையும், உளவாற்றலையும் பொறுத்து, கற்பனை யீடுபாடும், கலையீடுபாடும், ஆடல், பாடல், பொழுது போக்குகளின் ஈடுபாடும் மிகுந்து இருக்கும், இவர்கள் தம் குடும்பநிலையில் பிறர்மேல் அன்புடையவராக இருப்பினும், தம் மனைவியர் மேல் மிகுந்த அன்பும், ஆர்வமும், ஈடுபாடும் காமவெறியுணர்வும் அளவிறந்து இருக்கும், அதனால், அவனிடம் மிகுந்த பணிவும், அச்சவுணர்வும், அவள்சொல் வதை யெல்லாம் கேட்கின்ற தாழ்வுணர்வும் மிகுந்திருக்கும். தனிமை வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் அவர்கள் தம் மனைவியரை வற்புறுத்தி இணைவிழைவுக்கு ஈடுபடுத்துவர், அப்பெண்டிர் நோய்வாய்ப் பட்டிருப்பினும், உடல் மெலிவும் தளர்வும் கொண்டிருப்பினும், குழந்தைப் பேறு வாய்க்கப் பெற்றுக் கருவுற்று நிறைசூலியாக இருப்பினும், அல்லது கருவுயிர்த்துக் குழந்தைப்பேறு நிகழ்ந்து, பச்சையுடம்பினராய் இருப்பினும், அவர்களை, ஏதோ ஒருவகையிலாவது முயன்று அல்லது வற்புறுத்தி உடல் தொடர்பு கொள்ளும் கழிகாம வெறியராக அவர்கள் இருப்பர். இவர்களுக்குப் பொதுவுணர்வு, மக்கள் தொண்டு, கொள்கை, கோட்பாடு இலட்சியம் முதலியன இரா. அல்லது அவ்வாறிருந்தாலும், அங்கும் அவ்வகையிலும், இவர்களுக்கு அத்கைய உடலின்ப நாட்டம் குறைவு படாமல்தான் இருக்கும். இத்தகைய உணர்வுடையவர்கள் பிறர் மதிக்கத்