பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௯


இக்காலத்திடையில் வாழ்ந்து வந்த தமிழறிஞர்பெருமக்களிடம் திருக்குறளுக்குத் தனிமதிப்பு ஏற்படலாயிற்று! உரையாசிரியர்கள் உழைப்பெடுக்கத் தொடங்கினர்! ஏறக்குறைய நானூறாண்டுக்காலம் இந்நிலையில் வளங்கொழிக்கலாயிற்று! கி.பி. பத்தாம் நூற்றாண்டினின்று - பதினைந்தாம்நூற்றாண்டு வரையிலான உரைவெளிப்பாட்டுக்காலம் தமிழ்வளர்ச்சிவரலாற்றில் ஒரு பொற்காலமாகவே கருதத்தக்கது. இலக்கிய இலக்கண நூல்களுக்குக் கட்டாயமாக உரைகள் தேவையாயினமைக்கு - ஆயிரம் ஆண்டுக் கால இடைவெளிக்குள் தமிழின் மொழிநடையிலும், அதன் மரபுக் பொருள்கோள்முறை வகையிலும் கனத்த அளவில் நேர்ந்திருந்த நொய்வுந்தொய்வுங் கொண்ட மயக்கநிலைப் போக்கே காரணமாயிருந்தது!

பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தவராகக் கொள்ளத்தகும் பரிமேலழகர்க்கும் முன்னர், தொண்மர் (ஒன்பதின்மர் - 9) திருக்குறளுக்கு உரைகண்டு காட்டினர்! (அத் தொண்மர் உரைகளுள்ளும், மணக்குடவர் (மணக்குடியர்; தேவர்), பரிதி, பரிப்பெருமாள், காலிங்கர் (காளிங்கர்) ஆகிய நால்வர் உரைகளே நமக்கின்று கிடைப்பன!)

அத் தொண்மர் உரையிற் பெரும்பாலனவற்றை உறுத்து உள்நோக்கி உட்கொண்டார், பரிமேலழகர்! இத் தோய்வு உண்மையை, 133 இடங்களில் - அவர் பிறர் உரைகளைச் சுட்டிச் செல்வதனுள் அறியலாகும். 48 இடங்களில் பாடவேறுபாடுகள் பற்றிய முடிபுக் கருத்துரைத்துள்ள நிலைகளை உற்றுக்காணுகையில், - பல்வேறு மூல ஏடுகளை இதற்கென அவர் முயன்று பெற்றுத் தொகுபடச் சேர்த்து - அவற்றை வகையுற ஆய்ந்துள்ள திறவுழைப்புந் தெரிவுறுகின்றது! கழக இலக்கியங்களிற் பெரும்பான்மையன, அவர்க்கு அற்றுப்படி! காப்பியங்களிலோ, அவர் மூப்பறிவர்! அக்காலச் சமயநூல்களில் அவர் ஆழ்ந்து திளைத்தவர்! இலக்கண நூல்களை ஏற்றமுறக் கற்றவர்! கீழ்க்கணக்கு நூல்களின் ஆழ்வனப்பில் ஆழ்ந்து எழுந்தவர் ! அவருரையிடையில், மிகப் பலவேறு நூல்களினின்றெடுத்துக் கோத்து நிறைத்துக் கொட்டியுள்ள, 230 மேற்கோள்களிலெல்லாம் இத் தகுதிறங்கள் வெளிப்பட்டொளிர்கின்றன! அக் காலவட்டத்தில் அரியனவாயிருந்த சொற்களுக்கு 286 இடங்களில் அரும்பொருள் விளக்க விதைகளை விதைத்துள்ள உரைப்புலங் காண்கையில் நமக்கு வியப்பே மேலிடுகின்றது! வடமொழியில் அமைந்துள்ள பலதுறை நூல்களிலும் அவருக்குப் பரந்துபட்ட புலத்தோய்விருந்தமையை, உரியவாக அவர் எண்ணியவிடங்களிலெல்லாம் உரையிடங்களிடையில் இயைத்துக்