பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௪௨

முன்னுரை 



3.துன்பம் இணைந்து வரும் குற்றச் செயலை (ஆபத்தை) (Danger) ஏதம் (136) என்றதும்,

4. தம் இனத்தவர் ஒன்றாக வாழும் நிலத்தைத் தமரகம் (1027) என்று கூறியதும்,

5. பகையும் நட்பும் அல்லாத பிறரை ஏதிலார் (188) என்றதும்,

6. பெருந்தீனி தின்பவனைக் கழிப்பேரிரையான் (946) என்றதும்,

7. அன்பில்லாத தன்மையை நாரின்மை (958) என்றதும்,

8.நாள்தோறும் துன்புறுத்துகின்ற வறுமைத் துன்பத்தை நிச்சநிரப்பு (532) என்று கூறியதும்,

9. பார்வையைப் பார்வல் (1152) என்றதும்,

10. மற்றவன் வீட்டுப் புறங்கடையைப் பிறன்கடை (142) என்றதும்

-இவை அவர், இந்நூலுள் புதுவனவாகப் புனைந்து கொண்ட நூற்றுக்கணக்கான சொற்களுள் சிலவாகும்.

இனி, அவர் கையாண்டுள்ள கருத்துகளில் உள்ள இலக்கியச் சிறப்புப் பற்றியும் சில கூறுதல் வேண்டும். ஒரு கருத்தை நேரிடையாகவும் வெளிப்படையாகவும் சொல்லும் அதே நேரத்தில், அழகு பெறவும் அணிபெறவும் மிகச் சிறந்த சொற்களால், மிகச் சிறந்த அமைப்பு முறையில், கேட்பவர் உணர்வும் உயிர்ப்பும் உளப்பதிவும் பெறுமாறு நயம்பட எடுத்துக் கூறுவதே இலக்கியச் சிறப்பாகும். நயம்பட உரை என்றார் ஒளவையாரும்.

திருவள்ளுவரைப் பொறுத்த அளவில், வேறு எப்புலவரை விடவும் சொல்லும் முறைக்கே இலக்கணமும் இலக்கியமும் கண்டவர் அவர் என்று கூறுவது மிகையாகாது. தாம் விரும்புவதை எவ்வாறு சொல்லுதல் வேண்டும் என்பதை அவர் கீழ் வருமாறு பாரித்துக் கூறுவார்.

'இன்சொலால், ஈரம் அளைஇப் படிறு இல்லாதவாறு' (9), நல்லவை நாடி இனிய (96) முறையில், 'பண்பில் தலைப் பிரியாமல்' (97), 'சிறுமையுள் நீங்கிய இன்சொல்லால்' (98), 'வன்சொல் வழங்காது' (99), 'சொற்கோட்டம் இல்லாத செப்பமுடன்' (119), 'ஒன்றானும் தீச் சொல்' (128) பயவாமல், 'அறம் சொல்லும் நெஞ்சத்தொடு' (135), 'பயனில பாரித்துக்' (193) கூறாமல் 'சொல்லிற் பயனுடையவையை' (200) மட்டும் தேர்ந்து, 'ஆக்கமும் கேடும் அதனால் வருவதால், சொல்லின் கண் சோர்வு காத்து' (642), 'கேட்டார்ப் பிணிக்கும் தகைவாய்க் கேளாரும் வேட்கும்படி' (643) 'திறனறிந்து' (644), 'பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து' (645) 'நிரந்தினிது' (648), 'மாசற்ற சில சொல்லால்' (649) 'கற்றது உணர விரித்து' (700), 'அன்பு, அறிவு, ஆராய்ந்த' (682) சொற்களால், 'துரவாத