பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௬௪

முன்னுரை


ளுதல் வேண்டும்.

புதிய கருத்துகளைத் தருவது பிழையன்று; புதிய வடிவத்தைத் தருவது பொருந்தாமையன்றோ? இது தன் தாயின் பழைமை நோக்கி, அவளை இப்புதிய நாகரிகக் காலத்திற்கேற்ப அழகுப்படுத்த விரும்பி, ஞெகிழி அறுவை (பிளாஸ்டிக் சர்ஜரி) முறையில், அவளுடைய கண், காது, மூக்கு, வாய், மார்பு முதலியவற்றின் அமைப்புகளை மாற்றியமைப்பது போன்றதன்றோ?

முன்னுள்ளவர்கள் செய்த மாற்றங்களும், ஏதேனும் குறள் வைப்பு முறையில், இடம் பெயர்க்காமல், மாறுதல்கள் செய்ததும், இதுவும் ஒன்றாகாது. இவர் செய்த,

1. பால் பிரிவுகளைத் தவிர்ப்பது,

2. இயல் பிரிவுகளைத் தவிர்ப்பது, இடம் மாற்றுவது, வேறு பெயர்கள் தருவது,

3. அதிகாரங்களைத் தவிர்ப்பது, புதிய அதிகார அடைவுகளைச் செய்வது புதுப் பெயர்களைச் சூட்டுவது,

4. குறட்பாக்களை, வெறும் கட்டடச் செங்கற்களாகக் கருதிக் கொண்டு, தம் விருப்பப்படி, வேறு வேறு தலைப்புகளுள், வேறு வேறு எண்ணிக்கைப் பகுப்பில் வைப்பது.

- முதலிய இவையெல்லாம் பாட வேறுபாடுகள், முன்பின் வைப்பு முறை மாறுபாடுகள் போன்றன அல்ல.

மேலே காட்டிய நால்வகைச் சிதைவுகளுக்குமான சில எடுத்துக் காட்டும் விளக்கங்களும் வருமாறு:

1. அறத்துப்பால், பொருட்பால், (காமத்துப்பால் இவர் நூலுள் அறவே தவிர்க்கப்பட்டதும், எஞ்சியுள்ள இருபால்களுக்குமே திருக்குறள் என்று பெயரிடப்பெற்றுள்ளதுமே ஒரு பெரிய கோளாறு ஆகும்) ஆகிய பிரிவுகள் தவிர்க்கப்பெற்று மீதமுள்ளவற்றை, இல்வாழ்வியல், சமூக வாழ்வியல், ஆட்சியியல், பொருளியல், மெய்யியல் எனும் ஐம்பெரும் இயல்’பிரிவுகளாக்கியுள்ளது.

2.அறம்: பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்-ஆகிய நான்கு இயல்களும்

பொருள் அரசியல், அமைச்சியல், அரணியல், ஊழியல், படையியல், நட்பியல், குடியியல் ஆகிய ஏழு இயல்களும்

அடியோடு மாறப்பட்டுள்ளன; சில தவிர்க்கப்பட்டுள்ளன. அவற்றி