பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

11



அச்சிடுவதற்காகப் பெருந்தொகை வேண்டியிருந்ததாகையால் அத்தொகையில் தென்மொழி நெஞ்சங்களான திருவாளர்கள் ஈரோடை அரசமாணிக்கனார், மா.செ. தமிழ்மணியார், நிலா. வேங்கடவனார் முதலியோர் ஐயா அவர்களிடம் நூல் வெளியீட்டிற்குத் துணையாகத் தொகை விடுத்திருந்தனர். மேலும் முன்வெளியீட்டுத் திட்டத்தின்படி தென்மொழி அன்புள்ளத்தினர் சிலரும் தொகை விடுத்திருந்தனர்.

கதிரச்சுக்கோப்பில் பணி விரைவுபடுத்தப் பெற்று 10.3.93 அன்று வெளியிட்டுவிடத் திட்டமிடப்பெற்றது. இவ்வாறு மும்முரமாகத் திட்டமிட்டுப் பணி முனைப்பில் இருந்தபோது 1993 சனவரி 26ஆம் பக்கலில் தடாவில் ஐயா சிறைப்படுத்தப்பட்டார்கள். இந்த முறை சிறை ஐயாவிற்கு மன நைவையும், உடல் நலிவையும் ஏற்படுத்தியது. ஏழு திங்கள் சிறை வாழ்விற்குப் பின் வெளிவந்த பிறகு மீண்டும் திருக்குறளை வெளியிடும் பணியில் முனைந்தார். திருத்தத்திற்குப் பின் உரை நீண்டது.

இல்லறவியல் பகுதி வரை (240 குறள்களுக்கு மட்டும் முழு நிறைவுபடுத்திவிட்டு முடிக்கும்போது அதைப் பற்றி ஐயா அவர்கள் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுப் பேசுகையில், “இல்லறவியல் வரையில் முடித்துவிட்டேன். இனி, துறவறவியல்தான் போக வேண்டும்” என்று கூறினார்கள். ஆனால் வாழ்க்கையையே துறப்பார் என்று அப்போது யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. .

ஐயா அவர்களின் மறைவிற்குப் பின்னர், உயிர் முயற்சியான இந்நூலை வெளியிட வேண்டும் என்ற துடிப்பு அனைவரிடமும் இருந்தது. ஆனால் குறிப்புகள் ஒன்றும் விடுபடாமல் தொகுத்து வருவதற்குக் காலம் எடுத்துக்கொண்டது. முதல் நூறு திருக்குறளுக்கான உரை முதல் பகுதியை தி.பி.2028 (10-03-1997-இல் முதல் பதிப்பாக வெளிக்கொணர்ந்தோம். இப்போது ஐயா அவர்களின் 73-ஆம் ஆண்டு நிறைவையொட்டி 2006இல் இந்த முதல் பகுதியின் இரண்டாம் பதிப்பை வாங்குவோரின் சுமையைக் கருதி, பொதுமுன்னுரையை முதல்தொகுதி எனப்பிரித்தும் அத்துடன் இரண்டாம் தொகுதி, மூன்றாம் தொகுதி, நான்காம் தொகுதியெனத் தனித்தனியாகவும் தொடர்ந்து வெளிக்கொணர்ந்துள்ளோம். மேலும் ஐயா அவர்கள்,