பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அ-2-15 புறங்கூறாமை -19


தவறான செய்திகளால் உந்தப்பெற்று, அவற்றைப் பெரிதுபடுத்தியோ பிறரிடம் புறங்கூறுகிறான்; குற்றம் கூறுகிறான்; குறளை கூறுகிறான்; பழி கூறுகிறான்; அவதூறு கூறுகிறான். அதன் வழியாக முன்னவனுக்குப் பிறரிடம் உள்ள பெருமைகளை தகுதிப்பாட்டை - அவனைப்பற்றிப் பிறர் கொண்டடுள்ள நன்மதிப்பீட்டை நம்பிக்கையைக் குறைக்கவோ, சிதைக்கவோ, முற்றும் அழிக்கவோ முனைகின்றான். அவன் இவ்வாறு புறங்கறுதலுக்காகப் பலரிடமும் தொடர்புகொள்ளும் வாய்ப்பும் அவனுக்கு உண்டாகிறது. அவர்களுள் தனக்குகந்தவரை நட்பாக்கிக் கொண்டு, தனக்கு அவர்கள் வழிப் பலவகையான நலன்களையும் தேடிக்கொள்கின்றான்.

அவ்வாறு புறங்கூறும் புன்மையுணர்வும் (185), கயமையுணர்வும் (107), பொய்நகையும் (182) கொண்டவன், கற்றவனாகவும் (823), சில நிலைகளில் சிலர் மதிப்பைப் பெற்றவனாகவும் இருந்துவிடுவானாயின், வெறும் வாய்ச்சொற்களால் மட்டுமின்றி, எழுத்து வகையாகவும் நூல்கள் வழியாகவும் (40) எழுதி அவதூறு பரப்புகிறான்.

இவற்றாலெல்லாம் புறங்கூறும் புன்சொல்லன் (189), ஒரு போலி மனநிறைவு பெறுகிறான் (1074). புறஞ்சொல்லப் படுபவனுக்கு முன்னிருந்த நட்பாளர்களை அவனிடமிருந்து பிரித்துத் (187) தனக்குச் சார்பாளர்களாக அவர்களை ஆக்கி, அவர்களிடமிருந்து நலம் பெற்று உயிர்வாழ்கின்றான்(183).

இவ்வாறு மக்களில் பலர் புறங்கூறும் உணர்வு பெற்று இயங்குவது, பொதுமாந்த நல அமைப்புக்கு - அறத்திற்கு எதிரானதாகையால், அவ்வறமல்லாத தீயவுணர்வை இவ்வதிகாரத்தால் கண்டித்துக் கூறுவார்.

இப் புறங்கூறுதல் உணர்வு அழுக்காற்றுக்கும் வெஃகுதலுக்கும் அடுத்துத் தோன்றும் உணர்வாகையால் அவற்றின் பின்னர் இதனை நிரல்படுத்தினார், என்க.


கஅக. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. - 181

பொருள்கோள் முறை :

ஒருவன் அறங்கூறான் அல்ல செயினும்
புறங்கூறான் என்றல் இனிது.

பொழிப்புரை : ஒருவன் அறத்தைப் பற்றித் தெரிந்தும் அதைப் பிறரிடம் எடுத்துச் சொல்லாதவனாகவும், அறமல்லாதவற்றையே செய்பவனாகவும் இருப்பினும், அவன் புறங்கூறாதவனாக இருக்கிறான் என்று சொல்லப்பெறுவது நல்லது.