பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

அ-2-15 புறங்கூறாமை -19


‘வசையென்ய வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்’ - 238
‘வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழாதவர்’ - 240
‘பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்’ - 296
‘என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை' - 652
'சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து' - 777
‘ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை' - 1003

- எனவே ‘அறம்கூறும் ஆக்கம்' என்பது, அறத்தினால் விளையும் பயன் - அது புகழ் என்று பொருள்படும் என்க.

3. இதில் வந்துள்ள 'தரும்' என்னும் சொல் தன்மையிடத்தும் முன்னிலையிடத்தும் வராது, படர்க்கைக் கண் வந்ததால் இடவழுவமைதியாம் என்க. (தொல்: 512)

4. இது, முன்னிரண்டு குறள்களிலும் கூறப்பெற்ற பொய்த்தன்மையால் வாழும் தீமையும், அஃதின்மையால் பெறும் நன்மையும் கூறியதால், அவற்றின் பின்னர் நிரல் பெற்றது.


கஅ௪. கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல். - 184

பொருள்கோள் முறை :

கண்நின்று கண்ணறச் சொல்லினும்
முன்இன்று பின்நோக்காச் சொல் சொல்லற்க.

பொழிப்புரை : ஒருவன் கண்ணுக்கு எதிரே நின்று, கண்ணோட்டம் (எனும் இரக்கம்) இன்றி, அவன் குற்றத்தைக் கடிந்து சொல்லினும், அவன்முன் இல்லாமல், பின் விளையும் கேடுகளை எண்ணிப் பாராமல், (அவனைப்பற்றிப்) புறங்கூறும் பழிச்சொற்களைப் (பிறரிடம்) சொல்லுதல் வேண்டா.