திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
29
அவன் அதை நெஞ்சாரத் சொல்லுகின்றானல்லன் என்னும் உண்மை’ என்றும்,
பொருள் தருகின்றனர். இவையாவும் தெளிவற்ற குறைபொருளே. ஆசிரியருடைய உண்மையான நேரான கருத்து அவற்றில் புலப்படுமாறு இல்லை.
- ஒருவன் அறத்தைப் பற்றிப் பேசுகிறான் பெருமையாகப் பேசுகின்றான். ஆனால் தான் அவற்றைத் தன் உள்ளத்து ஒழுகலாறாகக் கொள்ளவில்லை. அந்நிலை பிறர்க்கு எவ்வாறு தெரியவருகிறது எனில், அவன் புறங்கூறும் தன்மையினனாக இருக்கிறான் என்பதே.
- அவன் ‘அறத்தைப் பற்றிச் சொல்லுகிறான்' என்பதை 'அறஞ்சொல்லும்' என்னும் சொற்கள் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. ஆனால் நெஞ்சத்தில் அவ்வுணர்வு இல்லாதவனாக இருக்கிறான் என்பது,
‘நெஞ்சத்தான் அல்லன்' என்னும் தொடரால் புலப்படுத்தப் பெறுகிறது.
2. புறஞ்சொல்லும் புன்மையால் காணப்படும் - அவன் பிறரைப் பற்றிப் புறங்கூறுகின்ற புல்லிய செயலால் கண்டு கொள்ளப்படும்.
புன்மை - புல்லிய தன்மை, இழிந்த தன்மை.
காணப்படும் - கண்டுகொள்ளப்படும். காணுதற்குப் புலப்படும்.
ஆசிரியர், இத்தகையவர்களை,
‘ஒதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்’
- 834
என்னும் கூற்றில் அடையாளம் காட்டுவார்.
3. அறத்தை உணர்ந்தும், உரைத்தும், புறங்கூறுதல் அறமன்று என்று உணராத தன்மையைப் புலப்படுத்துகிறதாகலின், முன்னதன் பின், விளக்கத்திற்காக, இது வைக்கப் பெற்றது.
கஅ௬. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்
- 186
பொருள்கோள் முறை : இயல்பு.
பொழிப்புரை : ஒருவனைப் பற்றிப் பிறரிடம் போய்ப் பழி கூறுபவனிடம் உள்ள குற்றங்களிலும், மிகக் கடுமையான குற்றங்கள் ஆராய்ந்தறியப்பட்டுப் பிறரால் மற்றவர்களிடம் கூறப்படும்.