திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
31
கஅ௭. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்
- 187
பொருள்கோள் முறை :
நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர்
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர்.
பொழிப்புரை : ஒருவருக்கொருவர் நகைத்துப்பேசி மகிழும்படியான நட்பாடுதலைத் தெளிவுற அறியாதவர், அவர்கள் வேறுபட்டுப் போகும்படி புறங்கூறி நண்பர்களைப் பிரிப்பர்.
சில விளக்கக் குறிப்புகள் :
1. நகச்சொல்லி நட்பாடல் தேற்றாதவர் - ஒருவருக்கொருவர் நகைத்துப்பேசி மகிழும்படியான நட்பாடுதலைத் தெளிவுற அறியாதவர்.
நகச்சொல்லி நட்பாடல் - ஒருவர்க்கொருவர் நகைத்துப் பேசி மகிழும்படியாக நட்பாடுதலை,
தேற்றாதவர் - தெளிவுற அறியாதவர்.
தேறுதல் - தெளிவுற அறிதல்.
- தன்னொடு அவரும், அவரொடு பிறரும் ஆக, ஒருவர்க்கொருவர் நகைத்துப் பேசி மகிழும்படியாக நட்பாடுதலைத் தெளிவுற அறியாதவர்.
‘களவல்ல மற்றைய தேற்றா தவர்’ .
- 289
'பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்’
– 649
- 'தேறாதவர்' என்னும் தன்வினைச்சொல் 'தேற்றாதவர்' என்னும் பிறவினை வடிவில் வந்தது.
- நட்புச் செய்தலுக்கு அடிப்படையே ஒருவர்க்கொருவர் மகிழ்ச்சியாகப் பேசிக் கருத்துப் பரிமாறிக் கொள்ளுதல். என்னை?
'முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு’
- 786
'நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்'
- 999
- என்பார் ஆகலின்,