பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

57


2) சீர்மை சிறப்பொடு நீங்கும் : அவருக்குற்ற மேன்மையும் பெருமையும் ஒருங்கே நீங்கிவிடும்.

சீர்மை : மேன்மை, உயர்ந்த தன்மை.

 ‘செறிவறிந்து சீர்மை பயக்கும்’ - 135

சிறப்பு : பெருமை, புகழ்த்தன்மை, 'பெருஞ்சிறப்பு' - (58)

 'ஒன்னார் விழையும் சிறப்பு' - (630)

 ‘செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு' - (750)

- மேன்மையும் பெருமையும் முன்பே தம் நீர்மையால் பெற்றிருந்தவர்கள், பயனில்லாதவற்றைச் சொல்லத் தொடங்குவாராயின், அவை அவர்களினின்று படிப்படியாய் நீங்கி விடும் என்றார்.

- அத்தகையவர் பயனில்லாதவற்றைப் பேசத்தொடங்கிய பின், அவற்றைக் கேட்பவர்கள் அவர்மேல் கொண்ட நல்லெண்ணங்களையும், பெருமையையும் கைவிடுவாராகையால், அவை நீங்கும் என்றார்.

3) முன்னைய குறளில், பயனில சொல்வதைக் கேட்டவர்க்கு, நேர்மை உணர்வும், நன்மைகளும் நீங்கும் என்றவர், இதில் அவ்வாறு சொல்பவர் ஏற்கனவே உயர்வும் சிறப்பும் பெற்றவராயிருப்பின், அவையும் நீங்கும் என்றதால், அதையொட்டி இது வைக்கப் பெற்றது.


க௬௬. பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல் - 196

பொருள்கோள்முறை : இயல்பு

பொழிப்புரை : பயனில்லாத உரைகளைக் கூறுகின்றவனையும், அவற்றைச் செவிமடுப்பவனையும் மாந்தப் பிறவி என்று கூற வேண்டாம். .மக்களினத்தின் பதர் என்று கூறுக

சில விளக்கக் குறிப்புகள்

1)பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்: பயனில்லாத உரைகளைக் கூறுகின்றவனையும், அவற்றைச் செவிமடுப்பனையும் மாந்தப் பிறவி என்று கூற வேண்டாம்.

பாராட்டுவானை : போற்றிக் கொள்பவனைப் போற்றிக் கொள்ளுதல் - கூறுதலும் செவிமடுத்தலும் செயற்பயனைக் கூறினார் என்க.