பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

5


“உரை எழுத விழைந்த நோக்கமும்
சூழலும் உருவாக்கத் திட்டமும்!

அழிவற்ற நம் அரும்பெரும் திருக்குறள் நூலுக்கு இன்றுகாறும் நூற்றைம்பதுக்கு மேற்பட்ட உரைகள், அது தோன்றிய நம் அறத்தமிழ் மொழியிலும், அண்டை அயல் மொழிகளிலும் தோன்றித் துலங்கி, மூல நூலுக்கு உயிர்ப்பும் செழிப்பும் சிறப்பும் பரப்பும் உயல்வும் பயில்வும் ஊட்டி வருகின்றன. திருக்குறள் போல் உலகில் தோன்றிய வேறு எம்மொழி நூலுக்கும், எவ்வற நூலுக்கும் இப் பலர்பால் உரைப்பேறு வாய்த்ததில்லை என்று வலிந்தும் துணிந்தும் கூறலாம்.

மக்கள் குலம் முழுமையும் கருத்தினும் செயலினும் மேம்பாட்டினும் அளாவியும், அனைத்துக் காலத்தையும் இடத்தையும் தழுவியும் நிற்கும் ஒரு தனிப்பேறாய் நின்றிலங்கும் ஒர் அரும்பெரும் அரிய அறநூலுக்கு, இத்துணை மாந்தப் பார்வை செல்வதும், அதன் மேல் இத்துணை ஆய்வு நோக்குகள் கொள்ளுவதும் வியப்பன்று; உரைப் பெருக்கம் சார்வது செயற்கையுமன்று; இயற்கையே! இந்நிலை இந்நூலுக்குப் பெருமையே தவிர, எனைத்தானும் சிறுமையே அன்று.

ஆயினும், இந்நூலுக்கு இன்றுவரை வெளிவந்த எம் கண்களிற்பட்ட நூலுரைகள் யாவும், அந்நூலின் கருப்பொருளுக்கும் திருப்பொலிவிற்கும், அஃகியகன்ற அறிவுச் செறிவிற்கும், உணர்வுத்தினர்வுக்கும், மெய்ப் பொருளுக்கும், உய்ப்பு அருளுக்கும் ஏற்றவாறு செய்யப் பெற்றுள்ளனவோ எனில், எம்மைப் பொறுத்த அளவினும் எம் சிற்றறிவிற்கு எட்டிய உணர்வினும் இல்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது.

இது பற்றியெல்லாம், கடந்த அரசியல் இருட்காலமாகிய 1975-76-ஆம் ஆண்டுகளில், யாம் சிறைப்படுத்தப் பெற்று, ஒராண்டுக் காலம், சென்னை, நடுவண் சிறையுள் வைக்கப் பெற்றிருந்த பொழுது, தீவிரமாகச் சிந்திக்கவும், அதன் வழித் தக்கவொரு தீர்வுக்கு எம்மைக் கொளுவிக்கவும் வேண்டியிருந்தது.

இவ் வகையில், எம் விழித்திறவுக்கு மொழிப்புலங் காட்டிய, விழுப்பெருந் தோன்றல், தமிழ்ப்பேராசான், மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் புலப்படுத்திய, 'திருக்குறள்